கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். என்எல்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தி.மு.கவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் முக்கிய பதவி வகித்து வந்தவர்.
![Petrol bombs on retired officer's home in Neyveli](http://image.nakkheeran.in/cdn/farfuture/xBHwa3OTAjTN9pJOdNDFIB1VB9STGqeUFdCcb2t3LRQ/1582697574/sites/default/files/inline-images/gfjhgjik.jpg)
இந்நிலையில் அவரது வீட்டில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது நேற்று இரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள், மதுபான பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, அவரது காரில் வீசிவிட்டு சென்றனர். பெட்ரோல் வெடிகுண்டாக மாற்றப்பட்ட, மதுபான பாட்டில் காரின் மீது மோதி பலத்த சத்தத்துடன் கார் தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் பார்க்கும் பொழுது கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
![Petrol bombs on retired officer's home in Neyveli](http://image.nakkheeran.in/cdn/farfuture/3RkOvz95jxIQN_2TyICwPSgjI269lbmRznDp0_8zEx8/1582697592/sites/default/files/inline-images/ghghjhjhjhj.jpg)
பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் இருந்த தீயை முழுவதுமாக அணைத்தனர். இதுகுறித்து நெய்வேலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ராஜேந்திரன் வீட்டின் மேல் மாடியில் தங்கி இருந்த, என்எல்சியில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருந்த இளைஞர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்ததாகவும், அவ்விரோதத்தால் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.