
பெரியாரிய சிந்தனையாளரும் திராவிட இயக்க பற்றாளருமான அய்யா ஆணைமுத்து அவர்கள், உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். இதனையறிந்து ஆனைமுத்துவின் மகனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது இரங்கலைத் தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
மேலும் தனது இரங்கல் அறிக்கையில், "தந்தை பெரியார் கொள்கையை நெஞ்சில் ஏந்தி, பகுத்தறிவு - சமூகநீதிப் பாதையில் பயணித்து, முதுமையிலும் பொதுத் தொண்டாற்றிய மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் மறைவு திராவிட இயக்கத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.
பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்த அய்யாவின் பெரும்பணியும், சிந்தனையாளன் என்ற சீரிய இதழ் வாயிலாக அவர் வழங்கிய கருத்துகளும் என்றும் நிலைத்திருக்கும். பெரியார் பெருந்தொண்டர் அய்யா ஆனைமுத்து அவர்களின் மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.