Skip to main content

ஊருக்கு உதவிய அதிகாரிகள்! ஒன்றுகூடி மரியாதை செய்த கிராம மக்கள்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020


 

T. Chengamedu Thasildar

 

மக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்த்து வந்த குளத்தைச் சீரமைக்க உதவிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள தொ.செங்கமேடு கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

 

இங்குள்ள முத்து மாரியம்மன் கோயிலை ஒட்டி சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. எப்போதும் வற்றாத அளவில் நீர் நிறைந்திருக்கும் என்றும் அதனைச் சுத்தமாக வைத்திருக்க மீன்கள் வளர்க்கப்படும் என்றும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

 

ஆனால் இக்குளம் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. இதனையடுத்து குளத்தைச் சீரமைக்கக்கோரி திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், சமூக வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் கோயிலை நிர்வகிக்கும் 9 தர்மகர்த்தாக்கள் இணைந்து மனு அளித்தனர்.

 

வட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் குளத்தைச் சீரமைக்க அனுமதி அளித்தனர். அதன்படி ஊர் மக்கள் ஒத்துழைப்போடு குளம் சீரமைக்கப்பட்டுள்ளது.

 

T. Chengamedu Thasildar

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள், 'இந்தக் குளத்தில் தண்ணீர் தேங்குவதன்மூலம் இதன் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் நீர் பெருகி ஊருக்கே குடிநீர்ப் பிரச்சினையைக் காலம் காலமாக தீர்த்து வருகிறது. வறட்சிக் காலத்திலும் கூட இந்தக் குளத்தில் நீர் நிரம்பி இருக்கும். இதன் மூலம் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளும் குளிர்ச்சியாகக் காணப்படும். இந்த ஊருக்கு அழகு சேர்ப்பது இந்தக் குளம். இப்போது குளம் சீரமைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.

 

ஊருக்கும் மக்களுக்கும் பெரும் பயன் தருகிற இந்தக் குளத்தைப் புனரமைக்க உறுதுணையாக இருந்த வட்டாட்சியர்கள் செந்தில்வேல், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஊர் மக்கள் சார்பாகக் கௌரவித்து மரியாதை செலுத்த முடிவு செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். தர்மகர்த்தாக்கள் பாலமுருகன், சிகாமணி, கோவிந்தராசு, சின்னத்துரை, ஆதிமூல நயினார், ராமலிங்கம், பாலகிருஷ்ணன், காசிநாதன், ஆறுமுகம் ஆகியோர் முன் நின்றனர்.

 

 

http://onelink.to/nknapp

 

இதுகுறித்துப் பேசிய தர்மகர்த்தாக்கள், 'கிராமத்துக்குத் தேவையான திட்டத்தை நிறைவேற்றித் தருமாறு அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுக்கிறோம். அதற்கு அதிகாரிகள் மனமுவந்து ஒத்துழைப்பு அளித்து அதை நிறைவேற்றுவதற்கு அனுமதி அளிக்கிறார்கள். திட்டம் நிறைவேறிய பிறகு அதற்குக் காரணமான அதிகாரிகளை மறந்துவிடக்கூடாது. அதற்கு உதவியாக இருந்த அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் அதன் அடிப்படையிலேயே அவர்களைச் சந்தித்து மரியாதை செலுத்தினோம்' என்று கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரூ.81 கோடியில் அருவாமூக்குத் திட்டத்தைத் தொடங்கி வைத்த வேளாண்துறை அமைச்சர்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Agriculture Minister launched the project for Aruvam at Rs 81 crore

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பரவலாறு வழித்தடத்தில் இருக்கும் 24 கிராம ஊராட்சிகளில் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மழை மற்றும் வெள்ள காலங்களில் அதிக நீர் வரத்தால் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.  இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்க வைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி காலத்தில் இதனை நிரந்தரமாக சரி செய்யும் விதமாக அருவாமூக்கு  திட்ட மதிப்பீடு தயார் செய்தது.   ஒவ்வொரு மழைக்காலங்களில் பாதிக்கப்படுவதைக் கருதி தமிழக அரசு பல்வேறு நிதிச் சிக்கலிலும் ரூ.81.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அருவா மூக்கு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது. இதனை ஒட்டி கடலூர் அருகே திருச்சோபுரம் அருகே திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமைத் தாங்கினார்‌. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்ளிடம் வடிநிலைக்கோட்டை நீர்வளத்துறை சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் திட்டத்தை விளக்கி பேசி அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் பணியைத் துவக்கி வைத்தார்.

Agriculture Minister launched the project for Aruvam at Rs 81 crore

பின்னர் பேசிய அவர், “குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள பரவலாறு மற்றும் நெய்வேலி என்எல்சி நிறுவனம் சுரங்க நீர் வெளியேற்றப்படுவதால் அதிக வெள்ள நீர் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள பகுதி மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்தில் இந்தப் பணிகள் முடிக்கப்படும். அதேபோல் கரிவெட்டி கற்றாழை கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்த பொது மக்களுக்கும் வாழ்வாதார இழப்பீட்டுத் தொகை தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இது பேச்சுவார்த்தை மூலம் கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் கொளஞ்சிநாதன் சரவணன் உதவி பொறியாளர்கள் ரமேஷ் கௌதமன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Next Story

சிறுமியிடம் பாலியல் மிரட்டல்: ஆந்திர மாநில வாலிபர் கைது

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
threat to girl: Andhra state youth arrested

சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் ஆன்லைன் மூலம் பழகி செல் போனில் இன்ஸ்டாகிராம் மூலம்  ஆபாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய ஆந்திர மாநில வாலிபரை சிதம்பரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூர் ஊரைச் சேர்ந்த கேசவன் மகன் கிரன் குமார் (21) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். மேலும் சிறுமியின் அங்கங்கள் குறித்த புகைப்படத்தை அவ்வாலிபர் பெற்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் கிரண்குமார் செல்போனில் இருக்கும் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பி.ரகுபதி உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூருக்கு சென்று வாலிபர் கிரண்குமார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அழைத்து வந்தனர். இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வாலிபர் கிரண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.