Skip to main content

ஊருக்கு உதவிய அதிகாரிகள்! ஒன்றுகூடி மரியாதை செய்த கிராம மக்கள்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020


 

T. Chengamedu Thasildar

 

மக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்த்து வந்த குளத்தைச் சீரமைக்க உதவிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ள தொ.செங்கமேடு கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

 

இங்குள்ள முத்து மாரியம்மன் கோயிலை ஒட்டி சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது. எப்போதும் வற்றாத அளவில் நீர் நிறைந்திருக்கும் என்றும் அதனைச் சுத்தமாக வைத்திருக்க மீன்கள் வளர்க்கப்படும் என்றும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

 

ஆனால் இக்குளம் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. இதனையடுத்து குளத்தைச் சீரமைக்கக்கோரி திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், சமூக வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் கோயிலை நிர்வகிக்கும் 9 தர்மகர்த்தாக்கள் இணைந்து மனு அளித்தனர்.

 

வட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் குளத்தைச் சீரமைக்க அனுமதி அளித்தனர். அதன்படி ஊர் மக்கள் ஒத்துழைப்போடு குளம் சீரமைக்கப்பட்டுள்ளது.

 

T. Chengamedu Thasildar

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள், 'இந்தக் குளத்தில் தண்ணீர் தேங்குவதன்மூலம் இதன் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் நீர் பெருகி ஊருக்கே குடிநீர்ப் பிரச்சினையைக் காலம் காலமாக தீர்த்து வருகிறது. வறட்சிக் காலத்திலும் கூட இந்தக் குளத்தில் நீர் நிரம்பி இருக்கும். இதன் மூலம் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளும் குளிர்ச்சியாகக் காணப்படும். இந்த ஊருக்கு அழகு சேர்ப்பது இந்தக் குளம். இப்போது குளம் சீரமைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.

 

ஊருக்கும் மக்களுக்கும் பெரும் பயன் தருகிற இந்தக் குளத்தைப் புனரமைக்க உறுதுணையாக இருந்த வட்டாட்சியர்கள் செந்தில்வேல், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஊர் மக்கள் சார்பாகக் கௌரவித்து மரியாதை செலுத்த முடிவு செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். தர்மகர்த்தாக்கள் பாலமுருகன், சிகாமணி, கோவிந்தராசு, சின்னத்துரை, ஆதிமூல நயினார், ராமலிங்கம், பாலகிருஷ்ணன், காசிநாதன், ஆறுமுகம் ஆகியோர் முன் நின்றனர்.

 

 

http://onelink.to/nknapp

 

இதுகுறித்துப் பேசிய தர்மகர்த்தாக்கள், 'கிராமத்துக்குத் தேவையான திட்டத்தை நிறைவேற்றித் தருமாறு அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுக்கிறோம். அதற்கு அதிகாரிகள் மனமுவந்து ஒத்துழைப்பு அளித்து அதை நிறைவேற்றுவதற்கு அனுமதி அளிக்கிறார்கள். திட்டம் நிறைவேறிய பிறகு அதற்குக் காரணமான அதிகாரிகளை மறந்துவிடக்கூடாது. அதற்கு உதவியாக இருந்த அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் அதன் அடிப்படையிலேயே அவர்களைச் சந்தித்து மரியாதை செலுத்தினோம்' என்று கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்