Skip to main content

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Former PM VP Singh Birthday CM MK Stalin Respect 

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் 94 வது பிறந்த தினம் இன்று (25.06.2024) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Former PM VP Singh Birthday CM MK Stalin Respect 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து வி.பி. சிங் சிலையை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி (27.11.2023) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீன்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாக பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இவர் செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர். பின்னாளில் உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். 

Former PM VP Singh Birthday CM MK Stalin Respect

அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள்தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக B.P. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதி காவலர் வி.பி. சிங் ஆவார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Minister tRb raja says cM MKStalin is going to America 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலுரை வழங்கினார். அப்போது பேசுகையில், “ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். தஞ்சையில் பாமாயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் 60% உறுதி செய்யப்பட்டுள்ளன. அதாவது 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.  கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின. 

Minister tRb raja says cM MKStalin is going to America 

மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு  ரூ. 2100 கோடி கடன் வழங்கப்படும். திருவண்ணாமலை மற்றும் கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும் தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது. மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்” எனத் தெரிவித்தார். 

Next Story

சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
West Bengal person arrested in Chennai

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் (வயது 30) என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடையவர் ஆவார். மேலும் இவர் ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பதுங்கியிருந்த அனோகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோகர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உபா சட்டம், தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.