
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பின்னல் வாடி எனும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவர், கிராம உதவியாளராக வேலை செய்துவருகிறார். அதே கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பிரசாந்த் என்பவர் பணி செய்துவருகிறார். பிரசாந்த், தனக்கு கீழ் வேலை செய்துவரும் கிராம உதவியாளர் விஜயகுமாரிக்கு அதிக அளவில் பணிச்சுமை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (04.08.2021) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பிரசாந்த், விஜயகுமாரி ஆகிய இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விஜயகுமாரி, எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு எல வாசனூர் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். விஜயகுமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர், விஜயகுமாரி எலி பேஸ்ட் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்.