Skip to main content

குழாய் உடைந்து கடலில் மிதக்கும் ஆயில்; போராட்டத்தில் மீனவர்கள்!

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Oil floating in the ocean after a pipeline breaks;

 

நாகை அருகே பட்டினச்சேரி மீனவ கிராமக் கடற்பகுதியில் சென்னை பெட்ரோலியக் கழகத்துக்கு சொந்தமான ஆயில் குழாய் உடைந்து வெளியேறும் கச்சா எண்ணெய்யால், அப்பகுதியில் உள்ள கடல் நீர் முழுவதும் ஆயிலாக மாறி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

 

நாகை மாவட்டம், நரிமணத்தில் சென்னை பெட்ரோலியக் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் முழுவதும் இங்கே சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

 

Oil floating in the ocean after a pipeline breaks;

 

கப்பல்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் இருந்து சென்னை பெட்ரோலியக் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சாமந்தான்பேட்டை வழியாக பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயே கப்பலில் வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.

 

இந்நிலையில் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் நேற்று முன்தினம் இரவு கடலில் கலந்துள்ளது. கச்சா எண்ணெய்யில் இருந்து வெளியேறும் நெடி, வாயு ஆகியவை கண் எரிச்சல், மூச்சுத் திணறலை ஏற்படுத்தி பொதுமக்களை பாதித்து வருகிறது.

 

Oil floating in the ocean after a pipeline breaks;

 

குழாய் உடைப்பிலிருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் சாமந்தான்பேட்டை மீனவ கிராமம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களின் கடல் பகுதிகள் வரை பரவியுள்ளது. இதனால் கடல் நீர் மாசு ஏற்பட்டு மீன்கள், நண்டுகள் உயிரிழந்து மிதக்கத் துவங்கியுள்ளன.

 

குழாய் உடைப்பு குறித்து தகவலறிந்த சென்னை பெட்ரோலியக் கழக அதிகாரிகள், ஓ.என்.ஜி சி அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பார்வையிட்டு வருகின்றனர். அதேசயம் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மீனவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

சென்னை பெட்ரோலியக் கழகம் இந்த குழாய் அமைத்தபோது, பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என உறுதி அளித்த நிலையில் குழாய் உடைப்பால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என அக்கிராமத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட மீனவ கிராம மக்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக இங்கு உள்ள குழாயினை அகற்றிவிட வேண்டும்  அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

 

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சார்லி கப்பல் 435, 436 இரண்டு கப்பல் மற்றும் டோனியர் விமானம் மூலம் கடலில் எந்த அளவு எண்ணெய் படர்ந்துள்ளது என்பதை கண்காணித்து வருகின்றனர். அதோடு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் அங்கு வந்த சிபிசிஎல் சேஃப்டி அலுவலரை கச்சா எண்ணெய் வெளியேறும் கடற்கரையில் மீனவர்கள் தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு குழாயில் ஏற்பட்ட அடைப்பை பழுது நீக்கம் செய்ய வந்த ஊழியர்களையும் தடுத்து நிறுத்தி குழாய் இனி இப்பகுதியில் இருக்கக் கூடாது, அதை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்