Skip to main content

‘நைட் ஒரு மணிக்கு இங்க என்ன வேல..’ - ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

 mysterious person entered the Sankarapuram Panchayat Council office in night

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே அமைந்துள்ளது சங்கராபுரம் ஊராட்சி. தமிழகத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சங்கராபுரத்தில் கடந்த 2019ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில், தலைவர் பதவிக்கு தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 

 

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், முதலில் வெற்றி பெற்றதாக தேவி மாங்குடிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு பிரியதர்ஷினி அய்யப்பன் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, தேவி மாங்குடி இல்லாமல் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக மற்றொரு சான்றிதழ் வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில், கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடைசியில் தேவி மாங்குடி தரப்பு வெற்றிபெற்றது. இதையடுத்து, சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தேவி மாங்குடி பதவியேற்றுக் கொண்டார்.

 

அதே சமயம், இந்த மூன்று வருட காலத்திற்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாண்டியராஜன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும், கவுன்சிலர் நல்லம்மாள் செல்வராணி அவருக்கு துணையாக ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் ஊராட்சி நிதியைக் கையாடல் செய்வதாகவும், முறைகேடு செய்வதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. அதன்பிறகு, கவுன்சிலர் நல்லம்மாள் செல்வராணி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.  இந்நிலையில், சங்கராபுரம் பஞ்சாயத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி காரைக்குடியைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாண்டியராஜன், ஊராட்சி செயலர் அண்ணாமலை மற்றும் முன்னாள் தனி அலுவலர் கேசவன் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

 

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முறைகேடு விவகாரம் குறித்து நான்கு வாரத்திற்குள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதே நேரம், முறைகேடு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் தேவி மாங்குடி, கடந்த 25 ஆம் தேதி இரவு 12.30 மணியளவில் வழக்கம் போல் தனது கைப்பேசியில் உள்ள அலுவலக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது, அந்த நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கம்ப்யூட்டரில் எதையோ பார்த்துக் கொண்டிருப்பதையும், முக்கிய ஆவணங்கள் உள்ள கோப்புகளை எடுத்து பார்ப்பதும் தெரிய வந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த தேவி மாங்குடி உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அலுவலகத்தில் இருந்த நபரை கையும் களவுமாகப் பிடித்ததில், அது ஊராட்சி செயலர் அண்ணாமலை என்பது தெரியவந்தது. அப்போது, போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனிடையே, நள்ளிரவு நேரத்தில் முறைகேடு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் அழிக்க முயன்றதாக, அண்ணாமலையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

அதன்பிறகு, ஊராட்சி மன்றத் தலைவர் தேவி மாங்குடி அளித்த புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, நள்ளிரவு நேரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை அழிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.