
கோவை காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க பிரமுகருக்கு சொந்தமான துணிக்கடைக்கு அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்து சென்றனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு இரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர் கணபதி மண்டல பா.ஜ.க செயலாளராக இருந்து வருகின்றார். இவர் காந்திபுரம் 7 வது வீதியில் பிக் பிராண்ட் என்ற பெயரில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்த கடையில் தடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்தின் அருகில் இருந்தவர்கள் தீ விபத்து சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், முகத்தை மறைத்தபடி வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் கடை வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து, தீ வைக்கப்பட்ட கடையை மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி நேரில் பார்வையிட்டார். தொழில் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசியல் ரீதியாகவோ அல்லது உட்கட்சி பிரச்சனை காரணமாகவோ புவனேஸ்வரன் கடைக்கு தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. சம்பவம் குறித்து காவல் இரத்தினபுரி நடத்தி வருகின்றனர்.
இந்த தீ வைப்பு சம்பவத்தில் கடையின் ஷட்டர் மட்டும் எரிந்த நிலையில் துணிகளில் தீ பற்றவில்லை என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.