
பூந்தமல்லி அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சின்னீர்க் குப்பம் சர்வீஸ் சாலையில் விபத்துக்குள்ளான ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வாகனங்களுக்கு அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. திடீரென குப்பையில் ஏற்பட்ட தீ அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு பரவிய நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதுதொடர்பாக வாகனஓட்டிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி தீயணைப்புத்துறையினர் நீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதுதொடர்பாக பூந்தமல்லி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.