Skip to main content

அமைச்சரின் உதவியாளர் விவகாரம்- வாபஸ் பெறப்பட்ட புகார் மனு!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Minister's Aide affair- Complaint withdrawn!

 

“என்ன இருந்தாலும் அந்தத் தலைமைக் காவலரை, அந்த அமைச்சரின் உதவியாளர் பொது இடத்தில் வைத்து அடித்திருக்கக் கூடாது. காவல்நிலையம் வரையிலும் புகாராகி, அமைச்சரின் உதவியாளர் மன்னிப்பு கேட்டு புகார் திரும்பப் பெறப்பட்டாலும் கூட, அந்தத் தலைமைக் காவலருக்கு அச்சம்பவம் நெருடலாகத்தான் இருந்திருக்கும்..” 


-திருச்செந்தூர் வாசகர் ஒருவர் அளித்த தகவல் இது!


என்ன விவகாரம்?

 

திருச்செந்தூர் போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறார், முத்துக்குமார். அந்த ஊரில் உள்ள ஒரு ஓட்டல் சந்திப்பில், அரசு பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்றது. காரை நிறுத்தியிருந்த தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் டிரைவரிடம், ஹெட் கான்ஸ்டபிள் முத்துக்குமார் ‘கொஞ்சம் காரை எடுங்க..’ என்று தெரிவித்திருக்கிறார். டிரைவரோ ‘இது அமைச்சரோட கார்..’ என்று மரியாதைக் குறைவாகப் பேசியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களும் இச்சம்பவத்தைக் கண்டு சத்தம் போட்டார்கள். அதனைத் தொடர்ந்து டிரைவர் காரை நகர்த்தியுள்ளார். 

 

அடுத்த பத்து நிமிடங்களில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாவும் மேலும் இருவரும் அந்த இடத்துக்கு வந்தனர். வந்த வேகத்தில் நாகரீகமற்ற வார்த்தையால் திட்டிய கிருபா, உடன் வந்த இருவர் ஹெட் கான்ஸ்டபிள் முத்துக்குமாரின் கையைப் பிடித்துக்கொள்ள, கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். கிருபா தாக்கியதில், முத்துக்குமார் அணிந்திருந்த மூக்கு கண்ணாடி கழன்று கீழே விழுந்திருக்கிறது. அதன்பிறகு அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் விலக்கிவிட முத்துக்குமார், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார்.

 

புகாரான பிறகு, ‘தெரியாம நடந்திருச்சு..’ என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் ஆய்வாளரிடம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு புகார் முத்துக்குமாரால் வாபஸ் பெறப்பட்டது. திருச்செந்தூர் போக்குவரத்து தலைமைக் காவலர் முத்துக்குமாரை நாம் தொடர்புகொண்டபோது “ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க. அடிச்சவங்களே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகு நான் என்ன பண்ணமுடியும்? அதான்.. புகாரை திரும்ப வாங்கிட்டேன்” என்றார் உடைந்த குரலில்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.