Skip to main content

லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

pic_9.jpg

 

தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தமிழ்நாடு முதல்வரால் கடந்த 5ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதுக்கு மேற்பட்ட உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகளை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான ஃபைல்களை வழங்குதல், அவசியமான மருத்துவ சேவைக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

 

இத்திட்டம் துவங்கப்பட்டு நேற்று முன்தினம்வரை (27.08.2021) மாநிலத்தில் மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 732 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். திருச்சியில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பெண் சுகாதார தன்னார்வலர்கள், நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள், இயன்முறை மருத்துவர்கள், இடைநிலை சுகாதார சேவையாளர்கள் ஆகியோர் இடம்பெறுவர். பொது சுகாதாரத்துறையின் களப்பணியாளர்கள், இந்தக் குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துகின்றனர்.

 

அதன்படி திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை உயர் ரத்த அழுத்த நோய் உள்ள 1,648 நபர்களுக்கும், நீரிழிவு நோய் உள்ள 1,200 நபர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுள்ள 849 நபர்களுக்கும் மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், 213 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 218 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

 

‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 27ஆம் தேதிவரை இதுவரை 41,303 பேர் பயனடைந்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்