Skip to main content

இளம்பெண் கொடூரக் கொலை; திருமணமான பிறகும் காதலியை விட மறுத்த காதலன்!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 lover who refused to let go of his girlfriend even after marriage

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொன்காடு ஆனந்தவல்லிபுரம் வாய்க்கால் தென்கரை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவமனை சமையலர் சிவகுமார் - கோவிந்தம்மாள் தம்பதியின் மகள் அம்மு என்ற சிவஜோதி (வயது 19). சிவகுமார் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சமையலராகவும் கோவிந்தம்மாள் பேராவூரணி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்கள். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள சிவஜோதி வீட்டிலேயே இருந்துள்ளார். 

இவர்கள் ஏற்கனவே பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே செக்கடித்தோப்பு என்ற பகுதியில் குடியிருந்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த காளி என்ற காளீஸ்வரன்(23), பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்சில் ஓட்டுநராகவும், லாரி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது காளீஸ்வரனுக்கும் சிவஜோதிக்கும் காதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதித்துள்ளனர். இதனால் சிவஜோதியை பார்க்க அவரது பெற்றோர், சகோதரர்கள் இருக்கும் போதே காளீஸ்வரன் அடிக்கடி சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக சென்றுள்ளார்.

இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு காளீஸ்வரன் பேராவூரணியை விட்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். தூரத்தில் இருந்தாலும் காளீஸ்வரனும் சிவஜோதியும் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆன தகவல் தெரிந்த பிறகு சிவஜோதி, காளீஸ்வரனுடன் பேசாமல் இருந்துள்ளார். செல்போன் மூலம் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளனர். 

தனக்கு திருமணமானாலும் காதலியை மறக்க முடியாத நிலையில் இருந்த காளீஸ்வரன், செவ்வாய்க்கிழமை மாலை பொன்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் பகுதியில் உள்ள சிவஜோதியை பார்ப்பதற்காக குடிபோதையில் வந்த காளீஸ்வரன், சிவஜோதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு வற்புறுத்தியுள்ளார். திருமணம் ஆன உன்னுடன் வரமாட்டேன்; நீ போய் உன் மனைவியுடன் போய் வாழ்ந்துக்க என்று சிவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். வாய்த் தகராறு முற்றவே சிவஜோதியின் பெற்றோர், பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த காவலர்கள் காளீஸ்வரனை கண்டித்து அனுப்பியுள்ளனர். காதலியை விட்டுப் போக நினைக்காத காளீஸ்வரன், புதன்கிழமை அதிகாலை மீண்டும் வந்து தூங்கிக் கொண்டிருந்த சிவஜோதியிடம் தன்னுடன் வந்து விடுமாறு மீண்டும் அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிவஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டுக் கதவின் பின்புறம் இருந்த கல்லை எடுத்து சிவஜோதி தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவஜோதி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சிவஜோதியின் சகோதரர்கள் அவனைப் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறையினர், சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய காளீஸ்வரனை தேடி வருகின்றனர். 

மேலும் தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு, அது சிறிது தூரம் ஓடி நின்றது. காதலித்த இளம்பெண், திருமணமான தன்னுடன் வராமல் தவிர்க்கவே ஆத்திரமடைந்த காதலன் கல்லை தலையில் தூக்கிப் போட்டுக் கொன்ற சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

“காளீஸ்வரன் முதல் நாள் சண்டை போட்ட போதே போலீசாருக்கு தகவல் சொன்னோம். அவங்க வந்து அவனை அழைச்சுட்டு போய் இருந்தால் எங்க புள்ளை உயிர் போயிருக்காது. வந்த போலீசார் அறிவுரை கூறி அனுப்பியதால் மீண்டும் போதையில் வந்து எங்க புள்ளைய கொன்னுட்டானே! எங்களுக்குன்னு கேட்க ஆள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா...” என்று உறவினர்கள் கதறிய கதறல் மருத்துவமனை வட்டாரத்தில் அனைவரையும் கண் கலங்க வைத்தது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.