Skip to main content

கொலை வழக்கு ஆயுள் தண்டனைக் கைதி தப்பி ஓட்டம்! - கோட்டைவிட்ட மதுரை மத்திய சிறை!

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

Life sentence prisoner escapes from Madurai Jail!

 

கத்தி திரைப்படத்தின் முதல் காட்சியில் கைதியாக கதிரேசன் கேரக்டரில் நடித்த விஜய், சிறைக் காவலர்களை ஏமாற்றி சிறையிலிருந்து எளிதில் தப்பிவிடுவார். மதுரை மத்திய சிறையிலிருந்து, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஆதியும்கூட, சிறைக் காவலர் பழனிக்குமாருக்கு போக்கு காட்டிவிட்டு, சுலபமாகத் தப்பிவிட்டார். எப்படி தெரியுமா?

 

மதுரை மத்திய சிறையில், தண்டனை சிறைவாசிகள் 680 பேர், விசாரணை சிறைவாசிகள் 842 பேர், நீதிமன்ற விசாரணையில் உள்ள சிறைவாசிகள் 166 பேர், தடுப்புக்காவல் சிறைவாசிகள் 299 பேர் என மொத்தம் 1987 சிறைவாசிகள் இருக்கின்றனர்.

 

டி.ஐ.ஜி. பழனி வசிக்கும் பங்களாவில் உள்ள மாடுகளைக் குளிப்பாட்டும் வேலையையும்கூட தண்டனை சிறைவாசிகளே பார்த்து வருகின்றனர். இந்நிலையில், 16-ஆம் தேதி காலை 6 மணியளவில் தண்டனை சிறைவாசிகள் 10 பேரை, தோட்ட வேலை பார்ப்பதற்காக டி.ஐ.ஜி. பங்களாவுக்கு சிறைக்காவலர் (GR1 Warder) பழனிக்குமார் எடுத்துச் சென்றார். அவர்களில் ஒருவரான ஆயுள் தண்டனைக் கைதி ஆதி, தான் அணிந்திருந்த வெள்ளை உடையைக் கழற்றி எறிந்துவிட்டு, சிறை நர்சரி கார்டனில் இருந்த டி-ஷர்ட்டை மாட்டிக்கொண்டு தப்பித்துவிட, சிறைக் காவலர் பழனிக்குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். 

 

Life sentence prisoner escapes from Madurai Jail!
கைதி ஆதி

 

ஆதி தப்பித்துச் செல்வதற்குமுன், தண்டனைச் சிறைவாசி செல்லையாவின் தங்கை முத்துமாரி மூலம், தன்னுடைய பணம் ரூ.20,000, செல்லையாவின் பணம் ரூ.20,000 என மொத்தம் ரூ.40,000-ஐ, Prisioner cash book சிறைக்காவலர் முகமது கனியிடமிருந்து கையெழுத்துப் போட்டு வாங்கச் செய்து, தனது பணம் ரூ.20,000-ஐ சிறைக்கு வெளியே முத்துமாரியிடமிருந்து பெற்றுக்கொண்டதும் நடந்துள்ளது.  

 

‘சிறையில் தண்டனைச் சிறைவாசிகள், அவர்களது தண்டனையில் ஒரு குறிப்பிட்ட கால அளவு தண்டனையை முடித்தால்தான், வெளிக்குழு (out gang) பணிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக ஆதி இருந்தும், மதுரை மத்திய சிறைக்கு வந்து 7 மாதங்கள்கூட முடியாத நிலையில், நடைமுறையில் இல்லாத வகையில் எப்படி வெளிக்குழு பணிக்கு, யாருடைய உத்தரவில் அனுப்பி வைக்கப்பட்டார்?’ எனக் கேள்வி எழ, மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்த கண்ணனைத் தொடர்புகொண்டோம். 

 

Life sentence prisoner escapes from Madurai Jail!
வசந்தகண்ணன்

 

“ஒரு சிறைவாசி ஜெயில்ல இருந்து வெளியேபோக எப்போதெல்லாம் அனுமதிக்கப்படுகிறார்? அவரோட எமர்ஜென்ஸி, அல்லது சாதாரண விடுமுறைல போகலாம். அவுட் கேங் பணிக்காக அனுப்பலாம். ஓபன்-ஏர் ஜெயில்ல விவசாய நிலம் இருக்கு, அங்கு வேலை செய்யவும் அனுப்பலாம். மதுரை மத்திய சிறைக்கு ரெண்டு இடத்துல தோட்டம் இருக்கு. பரேட் கிரவுண்ட் பக்கதுல ஒரு தோட்டம். டி.ஐ.ஜி. வீட்டு பக்கத்துல ஒரு தோட்டம். அங்கே விவசாயப் பண்ணையே இருக்கு. 


ரிமான்ட் காலத்தையும் சேர்த்து ஒரு சிறைவாசி மூணு வருஷத்துக்கு மேல அனுபவிச்சிருந்தா, அவங்கள வெளிக்குழு பணிக்கு அனுப்பலாம். ரிமான்ட் நாட்களையும் சேர்த்து 1000 நாட்களுக்கு மேல் சிறைவாசி ஆதி அனுபவிச்சிருக்காரு. ரூல்படிதான் அவரை வெளிக்குழு பணிக்கு அனுப்பி வச்சிருக்கோம். ரெகார்ட் எல்லாம் பக்காவா இருக்கு. நடைமுறைல இல்லாத எதையும் பண்ணல.  


ஜெயில்ங்கிறது 3000 பேர் இருக்கிற ஒரு குடும்பம் மாதிரி. அந்த 3000 பேருக்கும் வீட்டுல நல்லது-கெட்டது, வரவு-செலவு எல்லாத்துக்கும் காவலர்களை நியமிக்கிறோம். மதுரை மத்திய சிறையில் இருக்கிற காவலர்களோட எண்ணிக்கை 180. அவங்கள, உள்ளே, வெளியேன்னு ரெண்டு வேலைக்கும் பயன்படுத்துறோம். ஒரு நேரத்துல ஒரு ஷிப்டுக்கு 25 பேர். ஒரு நாளைக்கு 75 பேர். 8 மணி நேர ஷிப்டா கவர்மென்ட் மாத்திருச்சு. 8 மணி நேரத்துக்கு ஒரு ஷிப்டுன்னு மாறிக்கிட்டே இருப்பாங்க. இப்படியொரு சிக்கலான சூழ்நிலைல குறிப்பிட்ட ஒரு சிறைவாசியை மட்டும் எப்படி பார்த்துக்க முடியும்?  


சிறைக்காவலர் பழனிக்குமார்,  ரெண்டு சிறைவாசிய கேட்ல கையெழுத்து போட்டு கூட்டிட்டுப் போறாரு. சிசிடிவி ஃபுட்டேஜ் அப்படியே இருக்கு. வெளிய கூட்டிட்டு வந்து, சரி நீங்க பணத்த வாங்கிட்டு நேரா அங்க வந்திருங்க, நான் சாப்பாடு வாங்கப் போறேன்னு விட்டுட்டுப் போறாரு. இது யாரோட தவறு? மேனுவல்படி ரெண்டு சிறைவாசிய முறையா எடுத்துட்டுப் போயி, அவங்கள கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய இடத்துல யாருகிட்ட ஒப்படைச்சாரு? எல்லாம், அந்தக் காவலர் அந்தச் சிறைவாசிய நம்புனதுனால வந்த வினை. சிறைக்காவலர் பழனிக்குமார், பொறுப்பா ஒரு காவலர்கிட்ட சிறைவாசியை ஒப்படைச்சு கையெழுத்து வாங்கியிருந்தா, அவரு சஸ்பென்ட் ஆகிருக்க மாட்டாரு. சிறைவாசியும் தப்பிச்சிருக்க முடியாது” என்றார்.

 

மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் என்னதான் விளக்கம் அளித்தாலும்,  கைதியைத் தப்பிக்கவிட்ட விவகாரம் ஒரு கரும்புள்ளிதான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.