Skip to main content

’’மாநாட்டில் கூடிடுவோம்... மாற்றத்தை உருவாக்கிடுவோம்!”- ஸ்டாலின்

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
sst

 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்:

’’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஈரோடு மாநாட்டு மூன்றாவது அழைப்பு மடல்.

திருவிழா காண்கிற கிராமத்து எளியவர் போல, தித்திக்கும் தின்பண்டம் தேடும் சிறு குழந்தை போல, எத்திக்கும் புகழ் மணக்கும் தமிழை என்றும் காணும் என்னரும் புலவர் போல, எந்நாளும் உதயசூரியன் காணும் கீழ்த்திசை வானம் போல, எழுச்சி முகம் காட்டும் ஈரோடு மண்டல மாநாட்டில் உங்கள் அனைவரையும் காணும் பேராவலுடன் காத்திருக்கிறேன். இந்தக் கடிதத்தை நீங்கள் காண்கின்ற வேளையில், மாநாட்டிற்குப் புறப்பட குடும்பத்தாரோடு ஆயத்தமாகிக் கொண்டிருப்பீர்கள்.

கழக மண்டல மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி அவர்கள் தலைமையில்,மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் 15 செயலாளர்கள்தம் அயராத உழைப்பு, மாநாடு பிரகடனம் செய்யப் போகும் மாபெரும் வெற்றியை இப்போதே மாநிலத்திற்குப் பறைசாற்றுகிறது.

 

இலட்சோப இலட்சமெனக் குவியவிருக்கும் கழகத் தொண்டர்களின் வருகையினை எதிர்பார்த்து அவர்கள் தங்குவதற்காக விடுதிகள், மண்டபங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதுடன், மாநாட்டு வளாகத்திலும் போதுமான அளவில் வாகனம் நிறுத்தும் இடம், கழிப்பிடங்கள், பெண்களுக்கான தனி வசதிகள் ஆகிய தேவைகளை உருவாக்கி அவற்றையெல்லாம் முறைப்படுத்த கழகத் தொண்டரணியினரைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பல மாவட்டங்களிலிருந்தும் வருகிற ஒவ்வொரு தோழரும் வசதியாக இரண்டு நாள் மாநாட்டினில் மகிழ்வுடன் பங்கேற்றிடும் வகையில் மேற்கு மண்டல கழக நிர்வாகிகள் வேகமாகவும் விவேகத்துடனும் பணியாற்றி வருவது போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

 

சொந்த அலுவல்களை முடித்து வைத்துவிட்டு, இலட்சியம் காக்கும் இயக்கப் பணிக்காகத் தனியே புறப்படுகிறவர்கள் இருப்பீர்கள். கழகம் என்பதே நம் குடும்பம் என்ற உணர்வுடன் சொந்தம்-சுற்றம் சூழப் புறப்பபடுகிறவர்கள் இருப்பீர்கள். அருகில் உள்ள உடன்பிறப்புகளையும்  தோளோடு தோள்சேர்த்து அரவணைத்துக்கொண்டு ஒன்றாகப் பயணிக்கிறவர்கள் இருப்பீர்கள். உங்கள் அத்தனை பேரின் திருமுகம் கண்டு அகம் மலரும் அந்த இரண்டு நாட்கள் நெருங்கி வருவதை நினைக்கையில் நெஞ்சம் இனிக்கிறது; எண்ணமெல்லாம் மணக்கிறது. அந்த இனிப்பின் சுவை இதயத்தில் சுழன்று நிலைத்திருக்கும் வகையில், உங்கள் பயணம் உரியகவனத்துடனும் சரியான பாதுகாப்புடனும் அமைக்கப் படவேண்டும் என உங்களில் ஒருவனாகத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஈரோடு-காஞ்சி-திருக்குவளை, இந்த மூன்று திருத்தலங்களையும் மனக்கண்களால் நோக்கித்தான் நாம் ஒவ்வொரு நாளும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாகனத்தில் அல்ல.. இலட்சியத்தில். இந்த முறை வாகனத்தில் பயணிக்கும் வழி, நெடுஞ்சாலையாக அமையும். தமிழ்நாட்டில் நான்கு வழிச்சாலைகளை விரைந்து நிறைவேற்றக் காரணமாக அமைந்தது தி.மு.கழகம் என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெரியும்.

 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தி.மு.கழகம் பங்கேற்றிருந்ததன் விளைவாக, தலைவர் கலைஞர் அவர்களின் உந்துதலால், மத்திய அமைச்சராக இருந்த சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களின் தீவிரச் செயல்பாட்டால், டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் வேகமாக நிறைவேறியது. அதன் காரணமாக இன்று வாகனங்கள் விரைந்து செல்கின்றன. பயணநேரம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், அதிவேகம் என்ற பெயரால் ஆபத்தை விலைக்கு வாங்குவோரும் இருக்கிறார்கள். கழகத்தினர் அதனைக் கடைப்பிடிக்க வேண்டாம். விரைந்து பயணிப்பதைக் காட்டிலும், பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு மாநாட்டுக்கு பத்திரமாக வந்து திரும்பிட  வேண்டும் என்பதுதான் உங்களில் ஒருவனான என்னுடைய அன்பு வேண்டுகோள்.

 அரசியல் களத்தில்கூட கழகம் அதிவேகம் காட்டிட அவசரப்படாமல், அறமும் அமைதியுமான ஜனநாயக வழியில் பயணித்துக் கொண்டிருப்பதையும் அதன் இலக்கை அடையும் நேரம் நெருங்கி வருவதையும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் அறிவீர்கள். நாம் என்றைக்கும் குதிரை பேரம் நடத்துபவர்களல்லர். கொள்கையை நெஞ்சில் விதைத்து அது தமிழ்ச் சமுதாயமெங்கும் நல்விளைச்சல் தந்திட வேண்டும், அதனை அடுத்தடுத்த தலைமுறையினரும் அறுவடை செய்திட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்.


பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறும் கழகத்தின் மண்டல மாநாட்டில், அந்தக் கொள்கை முரசமான திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி முன்கூட்டியே திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவியர் நாள்தோறும் ஆர்வத்துடன் வந்து கண்காட்சியினைப் பார்த்து, நூறாண்டு கால திராவிட இயக்கத்தின் தியாக வரலாற்றுப் பாடத்தைக் கற்கிறார்கள். தங்கள் முன்னோர் இந்த சமுதாயத்தில் எந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் திராவிட இயக்கக் கொள்கைகளால் இன்று எந்தளவுக்கு நாம் நிமிர்ந்திருக்கிறோம்-உயர்ந்திருக்கிறோம் என்பதையும் கண்காட்சி வாயிலாகக் கற்பதுடன், நாம் இந்த சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய பொதுநலச் சேவைகள் என்ன என்பதற்கான விழிப்புணர்வினையும் பெறுகிறார்கள்.

 

மாநாட்டுப் பந்தலில் குவிந்திடும் ஆர்வத்துடன் வரக்கூடிய கழகத்தினர் அனைவரும் இந்தக் கண்காட்சியை அவசரப்படாமல் அவசியம் பார்த்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயம் தலை நிமிர்ந்திடும் வகையில் தன்மான உணர்ச்சி ஊட்டிய தந்தை பெரியாரின் ஈரோட்டு மண்ணில் நாம் கொள்கை முழக்க மாநாடு நடத்தும் நிலையில், தமிழ்நாட்டு எல்லை வழியாக மதவெறி விதைகளைத் தூவிடும் ரதயாத்திரை அனுமதிக்கப்படுகிறது. அதன் பக்கவிளைவாக, புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை துண்டிக்கப்படுகிறது. அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திக்கொண்டு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட மாநில ஆட்சியாளர்கள் மண்ணுக்குள் தலை புதைத்து மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். மத்திய ஆட்சியாளர்கள் மதவெறித் தீயை விசிறிவிடுகிறார்கள். கண்முன்னே சவால்கள் முளைத்துள்ள நேரத்தில்தான், மத்திய-மாநில அரசுகளை ஜனநாயக வழியில் வீழ்த்திடச் சூளுரைக்கும் வகையில் மண்டல மாநாடு சிறப்புடன் நடைபெறவிருக்கிறது.


மார்ச் 24, 25 ஆகிய இரு நாட்களும் கழகத்தின் கொள்கை முழங்கும் கோலாகலத் திருவிழா. கோட்டை போன்ற முகப்பு கொண்ட பந்தலின் முன்னே ஏற்றமிகு இருவண்ணக் கொடி வானுயர்ந்து பறக்கும். பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாளர்கள் ஆற்றும் உரைகள் யாவும் இலட்சியப் பாடம். தமிழகத்தையும் இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் நிறைவேற்றப்படவிருக்கின்ற தீர்மானங்கள்; அவற்றை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டங்கள் என ஈரோடு மண்டல மாநாடு அனைத்து வகையான அரசியல் மாற்றத்திற்கும் தயாராகிவிட்டது.

 

இது நமதுமக்கள் நலனுக்கான மாநாடு. அதன் நோக்கத்தை நிறைவேற்றித் தரவேண்டிய கடமை தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்தப் பொறுப்புணர்வுடன் மாநாட்டு அரங்கில் கூடிடுவோம்!தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும்  நல்ல மாற்றத்தை உருவாக்கிடுவோம்! உங்களில் ஒருவனாக உவகையுடன் அழைக்கிறேன்! உங்கள் அன்பு முகம் காண உள்ளத்தில் உணர்ச்சிபொங்கிட கனிந்துவரும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !