Skip to main content

காரில் விலை உயர்ந்த போதைப்பொருள் கடத்தல்; கேரள இளைஞர்கள் கைது

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

Kerala youth arrested salem

 

சேலம் வழியாக ஈரோட்டுக்கு, காரில் விலை உயர்ந்த போதைப்பொருளை கடத்திச் சென்றதாக கேரள வாலிபர்கள் இருவரை காவல்துறையினர்  கைது செய்தனர். 

 

சேலம் அரியானூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்விக் குழுமத்திற்குச் சொந்தமான கல்லூரியில் படிக்கும் வெளிநாடு, வெளிமாநில மாணவர்களுக்கு விலை உயர்ந்த போதைப்பொருள் ரகசியமாக சப்ளை செய்யப்படுவதாக உளவுப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், உளவுப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.    

 

இந்நிலையில், சேலம் வழியாக ஈரோடு நோக்கிச் சென்ற ஒரு சொகுசு காரில் மெத்தம்ஃபேட்டமைன் என்ற விலை உயர்ந்த, அபாயகரமான போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்ககிரி பகுதியின் வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான ரோந்து காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு நோக்கிச் சென்ற சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காரில் இருந்த 2 வாலிபர்களையும் கீழே இறக்கி பரிசோதித்தனர். அவர்களிடம் இருந்து 30 கிராம் எடையுள்ள மெத்தம்ஃபேட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. அதை  பறிமுதல் செய்தனர்.  

 

விசாரணையில் அந்த வாலிபர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் மங்கலம்குட்டையைச் சேர்ந்த அப்துல் முபாஷிர் (28), முகமது அப்சல் (30) எனத் தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்ததோடு, அவர்கள் வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இது ஒருபுறம் இருக்க, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் உண்மையிலேயே மெத்தம்ஃபேட்டமையின்தானா அல்லது வேறு வகையான போதைப்பொருளா எனத் தெரியவில்லை என்றும், இதுகுறித்து அறிய ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.