Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; கொலை முயற்சியில் முடிந்த சோகம்

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

kallakurichi murrarpalayam police yuvaraj and sharma related inicent

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் உள்ள மூரார்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32).  இவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது இவரை காவல் நிலையத்திலிருந்து ஆயுதப்படைக்கு  பணி மாறுதல் செய்துள்ளனர் அதிகாரிகள். இந்நிலையில்  இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் (வயது 22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கவிதாவின் சகோதரர் சர்மா, தனது தங்கைக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்கு என்ன காரணம் என்று விசாரித்துள்ளார்.

 

அப்போது யுவராஜ் தனது மனைவி கவிதாவை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதை மைத்துனர் சர்மா தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காவலர் யுவராஜ் மைத்துனர் சர்மாவின் தலையில் வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார் சர்மா. அக்கம் பக்கம் இருந்தவர்கள் சர்மாவை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் சர்மாவை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இது குறித்து யுவராஜ் மனைவி கவிதா சங்கராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "யுவராஜும் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக காவலர் யுவராஜ் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டு என்னை அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்தார். இது குறித்து ஏற்கனவே  திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் எங்கள் இருவரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பிறகும் என் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பை நிறுத்தவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு என் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று தங்கினேன்.

 

அங்கு வந்த யுவராஜ் என்னை மிரட்டி உனக்கு என்னை பிடிக்கவில்லை எனக்கு நீ விவாகரத்து கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியதோடு அரிவாளால் வெட்ட வந்தார். அப்போது எனது அண்ணன் சர்மா தடுக்க முயன்றார் . இதனால் மேலும் கோபமடைந்த யுவராஜ், எனது அண்ணன் சர்மா தலையில் வெட்டினார்" இவ்வாறு தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் மூரார்பாளையத்தில் சர்மாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சர்மாவை அரிவாளால் வெட்டிய யுவராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி பழனி, சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர்கள் நரசிம்ம ஜோதி, ஜெயமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, காவலர் யுவராஜ் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யுவராஜ் தந்தை ராமச்சந்திரன் காவல்துறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியில்  இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.