Skip to main content

மர்ம நபரின் அழைப்பால் ஒரு லட்சம் பணத்தை இழந்த அப்பாவி!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

Innocent who lost a lakh of money at the call of a mysterious person

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது சிறுவாலை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன்(36). கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி அறிமுகமில்லாத நபர் ஒருவர் ஆறுமுகத்திடம் செல்போன் மூலம் பேசியுள்ளார். அப்போது தான் ஒரு தனியார் மொபைல் போன் டவர் அமைக்கும் நிறுவனத்தின் அதிகாரி என்று கூறிய அந்த மர்ப நபர் மணிகண்டனிடம் பேசியிருக்கிறார். பின்னர் அவர், உங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் எங்கள் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளோம்.

 

அதற்கு முன் பணமாக நீங்கள் 25 லட்ச ரூபாய் முன்பணமாகவும் 30 ஆயிரம் ரூபாய் மாத வாடகையாக உங்களுக்குப் பணம் தரப்படும் அதற்கு நீங்கள் எங்கள் நிறுவன உயர் அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகச் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய மணிகண்டன் அந்த நபர் கூறியபடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 1ஆம் தேதி வரை ஆறு தவணைகளாக ஒரு லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார் மணிகண்டன். அதன்பிறகு அந்த நபரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது அவரது போன் துண்டிக்கப்பட்டது. அப்போதுதான் மணிகண்டன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

 

தான் மோசடியில் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மணிகண்டன் புகார் மீது வழக்குப்பதிவு செய்து  சுமார் ஒரு லட்சம் பண மோசடி செய்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதே மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் பகுதி உட்பட மேலும் சில இடங்களில் இதேபோன்று போன்ற செல்போன் டவர் அமைத்துத் தருவதாகக் கூறி செல்போன் மூலம் பேசி ஏமாற்றிப் பல லட்சம் பணம் பறித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அது குறித்தும் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பத்திரிக்கை, ஊடகங்களும் செய்திகளை வெளியீட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து அவ்வப்போது டெலிபோன் டவர் அமைப்பதாகக் கூறி பலரிடம் பணத்தைப் பறிக்கும் கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே தான் இருப்பார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.