பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டிலும் திருச்சி பெரிய சூரியூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு பின் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சராக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வந்துள்ளது மகிழ்ச்சி. தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. அதிகமான வீரர்கள் வந்துள்ளார்கள். காளைகள் பங்கு கொண்டுள்ளன. பரிசுகள் கொடுத்துக் கொண்டுள்ளோம். அவசரமாக வேறு ஒரு வேலை உள்ளதால் கிளம்ப வேண்டியதாகி விட்டது.
ஜல்லிக்கட்டு வீரர்கள் அரசு வேலைக்காக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனை முதல்வரிடம் சொல்லி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்போம். அது குறித்து முதல்வர் அறிவிப்பார்” எனக் கூறினார்.