விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2 வது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சூட்டிங் தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதனையடுத்து தற்போது இன்று மீண்டும் என்எல்சி 2 வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சரவணசுந்தரம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 'மிகவும் பாதுகாப்பு பகுதி என்று கடும் கட்டுப்பாடுகள் உள்ள பகுதியான சுரங்க பகுதியில் படப்பிடிப்பு நடத்த என்.எல்.சி நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என்றும், விஜய்யின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது போல், தங்களுக்கும் குடும்பத்துடன் உள்ளே சென்று வீடியோ, படங்கள் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் என்.எல்.சி நிறுவனம் வருவதற்கு முன்பே தாங்கள் காலம் காலமாக வழிபட்டு வந்த, துர்க்கை அம்மன் கோயில் சுரங்கத்தின் உள்ளே இருக்கும் நிலையில் வழிபடுவதற்கு அனுமதி அளிக்காதது ஏன் என்று முழக்கங்கள் எழுப்பி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சுரங்க பகுதியில் ஒருநாள் படப்பிடிப்பு நடத்துவதற்கு 25,000 வாடகை வசூலிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சுரங்க பகுதிக்குள் படப்பிடிப்புக்கு நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த படப்பிடிப்பு நடந்த விவகாரம் வருமான வரித்துறையினர் விஜய்யை அழைத்து சென்ற பிறகே வெளியில் வந்து பரபரப்பு நிலவி வருகிறது.

பிப்.1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிவரை படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறப்பட்டுதான் அங்கு ஷூட்டிங் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. என்எல்சி அதிகாரிகளும் அனுமதி பெற்றுதான் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பஜவினர் போராட்டம் நடத்துவதை அறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி 2 வது சுரங்கம் உள்ள பகுதியில் விஜய்க்கும், படக்குழுவிற்கும் ஆதரவாக குவிந்துள்ளனர்.