
2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (11.03.2021) காலை 9.15 மணிக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.