சேலத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட அமமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சேலம் கன்னங்குறிச்சி காவல்துறையினர் அக். 31ம் தேதி, சின்னத்திருப்பதி முதன்மைச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். காருக்குள், காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் 4 தொப்பிகள், 2 லத்திகள் ஆகியவை இருந்தன. காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த அமமுக பிரமுகர் ஜெகதீஸ்வரன் (30) என்பதும், தன்னை காவல்துறை அதிகாரி எனக்கூறி பலரிடம் மிரட்டிப் பணம் பறித்து வந்திருப்பதும் தெரிய வந்தது.
![DUPLICATE POLICE ARRESTED IN SALEM](http://image.nakkheeran.in/cdn/farfuture/8o4LEttqHaqfxF6x63pa71EbcYHd6ndtrthJ1wu5Y6s/1572637529/sites/default/files/inline-images/AMMK2.jpg)
இதையடுத்து ஜெகதீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். சொகுசு கார், அவற்றில் இருந்த தொப்பிகள், லத்திகளையும் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெகதீஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியில் சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்தார். இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, அடிதடி என பல வழக்குகள் உள்ளதால், அவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் காவல்துறை அதிகாரி எனக்கூறிக்கொண்டு பலரிடம் பணம் பறித்து வந்திருப்பதும், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டும் வந்துள்ளார். கைது செய்யப்பட்ட அவர் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.