
தமிழக அரசு முன்னெடுத்துள்ள போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் என்ற பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, திருச்சி மாநகரக் காவல்துறை மற்றும் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் உருவாக, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், போதைப் பொருட்கள் நுகர்வு, உபயோகம், பகிர்வு, விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக முழக்கமிட்டு, பொதுமக்களுக்கு போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகளைக் குறித்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், திருச்சி கன்டோன்மென்ட் சரக காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம், கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இவ்விழிப்புணர்வு நிகழ்வில் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஷீலா செலஸ், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை விஜயகுமார், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் மகளிர் பிரிவு தலைவி பாத்திமா கண்ணன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.