Skip to main content

சொகுசு காருக்காக மனைவியை கொன்ற வழக்கு: கணவரின் பெற்றோரும் கைது!

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

wife inciden husband and family arrested the police

 

சேலத்தில், சொகுசு காரை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி, புதுப்பெண்ணை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவரை தொடர்ந்து அவருடைய பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. முன்னாள் ஊர்க்காவல் படைவீரர். இவருடைய மகன் கீர்த்திராஜ் (வயது 31). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கீர்த்திராஜின் மனைவி தனஸ்ரீயா (வயது 26). பி.இ., பட்டதாரி. இவர்களுக்கு மூன்று ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

 

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட தகராறின்போது, கீர்த்திராஜ் மனைவியைத் தாக்கியுள்ளார். இதனால் அவருடன் கோபித்துக் கொண்டு தனஸ்ரீயா, சூரமங்கலம் முல்லை நகரில் வசித்து வரும் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற விட்டார். ஜூன் 11- ஆம் தேதி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார் கீர்த்திராஜ். அன்று இரவு தனஸ்ரீயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில், சம்பவத்தன்று இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கீர்த்திராஜ், வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார். 

 

இதையடுத்து கீர்த்திராஜ், தன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் கீர்த்திராஜை அப்போது கைது செய்தனர். அதேநேரம், திருமணமான மூன்றே ஆண்டில் புதுப்பெண் கொல்லப்பட்டதால், இச்சம்பவம் குறித்து சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினியும் விசாரணை நடத்தினார். 

 

கீர்த்திராஜூம், அவருடைய தந்தை பெரியசாமி (வயது 60), தாயார் ரஞ்சனி (வயது 57) ஆகியோரும் தனஸ்ரீயாவிடம் அடிக்கடி பணம் கேட்டும், சொகுசு கார் ஒன்றை பெற்றோரிடம் இருந்து வாங்கி வரும்படியும் கேட்டு கொடுமைப்படுத்தி வந்திருப்பது தெரிய வந்தது. 

 

கணவர் வீட்டார் கேட்டபடி வரதட்சணை வாங்கி வராததும், கொலைக்கு மற்றொரு காரணமாக இருந்துள்ளது. இதுகுறித்த கோட்டாட்சியரின் முழுமையான விசாரணை அறிக்கை, சூரமங்கலம் காவல்துறை உதவி ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் பேரில், பெரியசாமி, ரஞ்சனி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சார்ந்த செய்திகள்