
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கோவை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.