மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திண்டுக்கல்லில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், இதற்கு ஆதரவாக செயல்படும் மாநில அதிமுக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள தலைநகரங்களில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுபோல் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில், ஐ.பெரியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான கொறடா சக்கரபாணி. கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைத் தலைவரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெகன், மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, முன்னாள் நகர செயலாளர் பசீர் அகமது ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட கட்சி பொறுப்பாளரும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.