Skip to main content

தடுப்பூசிக்கு பரிசுகளை அள்ளி வழங்கும் மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம்! காரணம் என்ன? 

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

District and corporation administration giving   gifts for the vaccine! What is the reason?

 

கரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இரண்டாம் அலை உச்சம் அடைந்தபோது, கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொற்று பரவலின் எண்ணிக்கை சற்று குறையவே, ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகிறது. இது கரோனா பரவலை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தாலும், கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகள் அவசியமாக இருக்கிறது. 

 

இதனால், கரோனா தடுப்பூசியை மக்கள் அதிகளவில் செலுத்திக்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறது. அதன்படி கடந்த வாரம்வரை தொடர்ந்து மூன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து அரசு துறைகளையும் இணைத்து தடுப்பூசி விழிப்புணர்வும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அவசியத்தையும் வலியுறுத்தி தடுப்பூசி போடப்படுகின்றன. வீடு வீடாகச் சென்றும் தடுப்பூசி போடப்பட்டுவருகின்றன.

 

இருந்தபோதிலும், இன்னும் பலர் முதல் தவணை தடுப்பூசியையே செலுத்தாமல் இருந்துவருகின்றனர். இந்நிலையில், இந்த வார ஞாயிற்றுக்கிழமையும் (10.10.21) தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முழுக்க மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவிருக்கிறது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களுக்குப் பல்வேறு பரிசுகளை சில மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. 

 

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (10ஆம் தேதி) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் பெயர்களைக் குறிப்பெடுத்து அதைக்கொண்டு குலுக்கல் நடத்தப்படவிருக்கிறது. அந்தக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று நபர்களுக்கு 40 இன்ச் எல்.இ.டி கலர் டிவி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

 

அதேபோல், மதுரை மாநகராட்சியில் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. முதல் பரிசாக வாஷிங் மிஷின், 2ஆம் பரிசாக 2 நபர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்ஃபோன், 3ஆம் பரிசாக 10 நபர்களுக்கு பிரஷர் குக்கர், சிறப்பு பரிசாக 30 நபர்களுக்கு சேலைகள், வேட்டிகள் மற்றும் துண்டுகள் வழங்கப்படவுள்ளன.

 

தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தி 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டு மக்களைக் காக்க மாநில அரசு முதல் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் வரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.