கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையம் பின்புறம் உள்ள மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் ஜமாலுதீன். இவர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது மகளுக்கு சொந்தமான 31 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் வெளியூர் சென்றுள்ள நபர்களின் வீடுகளை மோப்பம் பிடித்த கொள்ளையர்கள் விசாலாட்சி என்பவர் வீட்டில் 7 சவரன் நகை, நித்தியா என்பவரது வீட்டில் 5 பவுன் நகை, 4 தங்க நாணயங்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் இருவரது வீட்டிலும் உள்ள நபர்கள் வெளியூர் சென்றதால், அந்த வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர. இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில் காவல் நிலையம் அருகில் உள்ள பகுதியில் அடுத்தடுத்த 5 வீடுகளில், மர்ம நபர்கள் 50 சவரன் நகைகளுக்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.