Skip to main content

சொந்தச் செலவில் தார்ச்சாலை அமைத்த சுயேட்சை பெண் கவுன்சிலர்... குவியும் பாராட்டுகள்!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

Tamilarasi arul

 

கொடுத்த தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்ற, சொந்தச் செலவில் சுமார் 1 கி.மீ நிலம் வாங்கி சாலை அமைத்துக் கொடுத்துள்ளார் சுயேட்சை பெண் கவுன்சிலர்.

 

தேர்தலின் போது அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை வெற்றி பெற்று வந்த பின்னர் மறந்து விடும் இந்தக் காலத்தில் பெரம்பலூர் அருகே சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர் ஒருவர் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை, அரசின் உதவியை எதிர்பார்க்காமல் தனது சொந்தப் பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைத்து வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

 

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றியம் 9 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றவர் தமிழரசி. வாக்கு கேட்கும்போதே சாத்நத்தம் கிராம பொதுமக்கள் தங்கள் ஊரிலிருந்து விவசாய இடுப்பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கும் வேப்பூருக்கு நன்னை வழியாகச் சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் குறுகிய நேரத்தில் செல்லும் வகையில் சாலை அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் கவுன்சிலராக வெற்றிபெற்ற தமிழரசி அந்த மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தனது சொந்தச் செலவில் சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார்.

 

அதற்காக சில விவசாயிகளிடம் தேவையான இடத்தைக் கிரையமாகப் பெற்று 20 அடி அகலத்தில் சுமார் ஒன்னேகால் கிலோ மீட்டருக்கு தனது சொந்தப் பணம் 12 லட்ச ரூபாயை செலவு செய்து சாலை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார். பணிகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் சாத்தநத்தம் கிராமமக்கள் 5 கிலோமீட்டர் பயணித்து வேப்பூர் செல்லும் நிலைமாறி தற்போது ஒருகிலோ மீட்டர் தூரத்திலே சென்றடையலாம். இதன் மூலம் அப்பகுதி மக்களில் சுமார் 100 ஆண்டுகள் கனவான குறுக்குவழி சாலை அமைக்கும் திட்டம் நிறைவேறியுள்ளது அப்பகுதி மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. விரைவில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சாலை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது. அதனை வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை திறந்துவைத்தார்.

 

சொந்த செலவில் இணைப்புசாலை அமைத்துத் தந்துள்ள பணியை மக்கள் பாராட்டி வரும் நேரத்தில் அவரிடமே கேட்டோம் இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி உதயமானது என்று,

 

"தேர்தலின்போது இந்தகவுன்சில் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு ஓட்டு கேட்டு போகும் போது இணைப்பு சாலை திட்டத்தை என்னிடம் நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தனர். வெற்றி பெற்றால், அரசு உதவியைக் கூட எதிர்பார்க்காமல் இத்திட்டத்தை நிறைவேற்றுவது என்று முடிவு செய்திருந்தோம் அதேபோன்று என்னை மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஒன்றியக் குழு உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு சாலைப் பணியை நிறைவேற்றுவதற்கு கடும் முயற்சி செய்தேன். இதில் சம்பந்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் பலமுறை நேரடியாகச் பேசி அவர்களைச் சம்மதிக்க வைத்தோம். இடம் கொடுத்த சிலருக்குப் பணம் கொடுத்தோம் சிலருக்கு மாற்று இடம் வாங்கிக் கொடுத்தோம் இப்படிச் சாலைக்காக நிலம் வாங்கப்பட்டது. இந்தச் சாலை 21 அடி அகலமும் ஒன்றே கால் கி.மீ(1,300 மீட்டர்) நீளம் கொண்டது. சாலைப் பணி முடிந்து திறந்து வைத்த பிறகு இதைப் பயன்படுத்தும் எங்கள் கிராம மக்கள் மிகவும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக உள்ளனர். அதுவே எங்களுக்கு பெரும் சந்தோஷமாக உள்ளது இது மட்டுமல்ல கிராமங்களை இணைக்கவும் விவசாய நிலங்களுக்குச் சென்று வரவும் சுமார் மூன்றரை கிலோமீட்டர் தூரம் இரண்டு பேர் நடந்து செல்லக்கூடிய அளவுக்கு குறுகிய பாதையாக இருந்ததை இப்போது 10 அடி அகல சாலையாக மாற்றி சொந்தச் செலவில் புனரமைத்துள்ளோம். சொந்தமாக விவசாயிகளிடமிருந்து நிலம் வாங்கி அமைக்கப்பட்டுள்ள சாலையை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க உள்ளோம் அதன் பிறகு அதைத் தார்ச்சாலையாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் தமிழரசி அருள்.

 

இவரை முன் உதாரணமாகக் கொண்டு மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இது போன்று செயல்பட்டால் கிராமப்புறங்களில் உள்ள பொது மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காணப்பட்டு மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்பதில் ஐயமில்லை. உள்ளாட்சியில் சிறந்த மக்கள் பிரதிநிதிகளில் தமிழரசி போன்றவர்கள் பலர் உருவாக வேண்டும். மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார் தமிழரசி அருள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.