
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது மூவாயிரத்தைக் கடந்திருக்கிறது. என்றுமே இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் இன்று 266 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1,458 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,458 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர் எண்ணிக்கை 2,757 -லிருந்து 3,023 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 இல் இருந்து 30 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 17 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 716 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் 1,379 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 1,611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் ஒரே நாளில் 33 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 37 ஆயிரத்து 206 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 40 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.
அதேபோல் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 33 பேருக்கும், கடலூரில் 9 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும், திருவள்ளூர், தென்காசி, மதுரை, அரியலூரில் தலா இரண்டு பேருக்கும், கோவையில் 4 பேருக்கும், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் ஒருவருக்கும் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.