![Cooperatives: 58 CSRs Promoted to Deputy Registrar!](http://image.nakkheeran.in/cdn/farfuture/oRTAO38lEN1XdHKRRUih70xpYV9x7MyqobFsm_eSm-8/1663657629/sites/default/files/inline-images/th_3209.jpg)
தமிழகத்தில், கூட்டுறவுத் துறையில் பணியாற்றி வரும் சார்பதிவாளர்கள் (சி.எஸ்.ஆர்) 58 பேருக்கு ஒரே நேரத்தில் துணை பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. பதவி உயர்வை அடுத்து அவர்கள் உடனடியாக புதிய இடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி, திருவண்ணாமலையில் பணியாற்றி வந்த அன்பழகன் தர்மபுரி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராகவும், கோவையில் பணியாற்றி வந்த பரமேஸ்வரன் சேலம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சேலத்தில் பணியாற்றி வந்த சின்ன பையன் தர்மபுரி பொது விநியோகத் திட்ட துணை பதிவாளராகவும், கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த மதியழகன் தர்மபுரி கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாக இயக்குநராகவும், திருப்பூரில் பணியாற்றி வந்த தமிழரசு கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநராகவும், கோவையில் பணியாற்றி வந்த குண்டன் நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலக துணை பதிவாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலத்தில் பணியாற்றி வந்த குமார் கிருஷ்ணகிரி பொது விநியோகத்திட்ட துணை பதிவாளராகவும், சேலத்தில் பணியாற்றி வந்த பரமசிவம் ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிர்வாக இயக்குநராகவும், நாமக்கல்லில் பணியாற்றி வந்த நாகராஜன் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிர்வாக இயக்குநராகவும், சேலம் தனசேகரன் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க துணை பதிவாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்கள் உள்பட பதவி உயர்வு பெற்ற 58 பேருக்கும் புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.