Skip to main content

சிக்னல்களில் பிச்சையெடுக்கும் வடமாநில பெண்களிடம் இருப்பது கடத்தப்பட்ட குழந்தைகளா? - உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

chennai highcourt

 

தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்கள், ஜனவரி 25 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 -ஆம் ஆண்டு, சென்னையில் பாரிமுனை பகுதியில் தெருவோரம் தூங்கிய 8 மாத குழந்தை ராகேஷும், வால்டாக்ஸ் சாலையோரம் தூங்கிய சரண்யாவும் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கக்கோரி எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

ஏற்கனவே இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குழந்தை கடத்தலை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தை கடத்தல் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘குழந்தைகள் கடத்தலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் சிறார் நீதிச்சட்ட விதிகளைப் பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? லாப நோக்கில் செயல்படும் இதுபோன்ற காப்பகங்களால்தான் ஆதரவற்ற குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கரோனா பேரிடர் காலத்தில் இது போன்ற காப்பகங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சிறார்களின் நலனுக்காக ஒரு பொது நல வழக்கு கூட தொடரப்படவில்லை. தமிழக அரசும் அவர்கள் குறித்துக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.


அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதால் தான் அவர்கள் மீது யாரும் அக்கறை கொள்ளவில்லையா? பல டிராஃபிக் சிக்னல்களில் ஏராளமான குழந்தைகளை வைத்து, வட மாநில பெண்கள் பிச்சை எடுப்பது அதிகரித்து வருகின்றன. அவர்கள் வைத்திருப்பது கடத்தப்பட்ட குழந்தைகளா? அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறதா என்பது குறித்து ஏன் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வதில்லை. காலியாக உள்ள மாநில குழந்தைகள் நல ஆணையப் பதவிகள் நிரப்பப்படவில்லை. 2016 -ஆம் ஆண்டு முதல், பல உத்தரவுகள் பிறப்பித்தும் குழந்தை கடத்தல் வழக்குகளை காவல்துறையினர் முறையாகக் கையாளவில்லை.’ என வேதனை தெரிவித்தனர்.

 

cnc


மேலும், தமிழகத்தில் குழந்தை கடத்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 25- ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, உள்துறை மற்றும் சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்கள், கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Former PM VP Singh Birthday CM MK Stalin Respect 

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் 94 வது பிறந்த தினம் இன்று (25.06.2024) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Former PM VP Singh Birthday CM MK Stalin Respect 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து வி.பி. சிங் சிலையை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி (27.11.2023) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீன்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாக பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இவர் செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர். பின்னாளில் உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். 

Former PM VP Singh Birthday CM MK Stalin Respect

அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள்தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக B.P. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதி காவலர் வி.பி. சிங் ஆவார்.

Next Story

எருமை முட்டி இழுத்து சென்ற பெண்ணுக்கு மேலும் ஒரு துயரம்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Another tragedy for the woman dragged by the buffalo

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகிய நிலையில் அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் ஒரு துயரம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாது முதியவர்கள் சிலர் மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற மதுமதி என்ற பெண்ணை எதிர்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்த எருமை மாடு எதிர்பாராத விதத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக்கொண்ட அப்பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மதுமதியை இழுத்துச் சென்றது. இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்தப் பெண்ணை மீட்க வந்தவர்களையும் எருமை மாடு முட்டியது. இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Another tragedy for the woman dragged by the buffalo

பாதிக்கப்பட்ட மதுமதியை உறவினர்கள் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு மதுமதியின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு 48 தையலுக்கு மேல் போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மதுமதியின் கால் தொடைப் பகுதி அழுகிவிட்டதாக தற்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காலில் அழுகிய நிலையில் இருந்த சதையை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். அந்தப் பகுதியில் மற்றொரு காலில் உள்ள சதையை எடுத்து தைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர்.