![Bodies lined up at Madurai Electric Cemetery ..! What is the domain status?](http://image.nakkheeran.in/cdn/farfuture/8M2xsUurr1A_z90p-nsysWfAuFYbm78glB9Qzw3YNek/1621054509/sites/default/files/inline-images/th_901.jpg)
மதுரை, கீரைத்துறை மின் மயானத்தில் வரிசையாக பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, கரோனா குறித்த தேவையற்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்திவருகிறது. அதன் உண்மை நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து ஆய்வுசெய்தோம்.
மதுரையில் கரோனா காலத்திற்கு முன்பு சராசரியாக 15 - 25 இறப்புகள் பதிவாகிவந்தன. தற்போது கரோனா பாதிப்பின் காரணமாக இரட்டை இலக்கத்தில் இறப்புகள் பதிவாகிவருகின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 62 பேர் கரோனாவால் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை கூறுகிறது. ஆக, சராசரி இறப்புகள், கரோனா இறப்புகள், கரோனா அல்லாத இறப்புகள் என நாளொன்றுக்கு சராசரியாக 60 மரணங்கள் பதிவாகிவருகின்றன. மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரைக்கும் தத்தனேரி, கீரைத்துறை ஆகிய இரண்டு இடங்களில் மின் மயானங்கள் இயங்கிவருகின்றன. தற்போது, தத்தனேரி மயானத்தில் மட்டும் அதிகமான பிணங்களும், கீரைத்துறை மயானத்தில் குறைவான பிணங்களும் எரிக்கப்பட்டுவந்தன. அரசு மருத்துவமனையில் இறக்கும் நபர்களின் உடல்களை மொத்தமாக தத்தனேரி மயானத்திற்கே கொண்டு செல்லாமல், கீரைத்துறை மயானத்திற்கும் பிரித்து அனுப்பும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, இரண்டு நாட்களாக பிணங்கள் பிரிக்கப்பட்டு கீரைத்துறை மயானத்தில் எரிக்கப்படுகின்றன. இந்த மயானம் ரோட்டரி கிளப் சார்பில் இயங்கிவருகிறது. இரவில் எரியூட்டும் பணிகள் நடைபெறுவதில்லை என்பதாலும், பிணங்களைப் பதப்படுத்திவைக்கும் குளிர்சாதன பெட்டிகள் இல்லாததாலும் அங்கு பிணங்கள் தேங்கியுள்ளன. அப்படி, 11.05.2021 அன்று வந்து தேங்கியிருந்த பிணங்கள்தான் அந்த வீடியோ காட்சியில் இருப்பவை. 11.05.2021 அன்று மட்டும் 45 பிணங்கள் கீரைத்துறை மயானத்தில் எரியூட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கீரைத்துறை மயானத்தில் 24 மணி நேரமும் எரியூட்டும் பணிகள் நடைபெற துவங்கியுள்ளதாகவும், குளிர்சாதன பெட்டி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் அந்த வீடியோவால் தேவையற்ற அச்சம் அடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.