Skip to main content

நாகையில் பாஜக திமுக மோதல்; பாஜக ஆர்ப்பாட்டம்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

bjp struggle nagapattinam

 

நாகையில் பாஜக- திமுக பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி பாஜகவினர் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

நாகப்பட்டினம்  அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜேயந்திரன். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதோடு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் நீண்டகாலமாக இருந்துள்ளார். நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலில் சீட் கிடைக்காத நிலையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளார்.

 

இந்த நிலையில் விஜயேந்திரனுக்கு பாஜகவில் மாவட்ட அளவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக விஜயேந்திரனின் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதிக சத்தமுள்ள வெடி என்பதால், அதிர்வில் அருகிலிருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி என்பவரது மளிகை கடையில் உள்ள கண்ணாடி உடைந்ததாகக் கூறப்படுகிறது.

 

இதில் நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி ஆதரவாளர்களுக்கும், விஜியேந்திரன் ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மோதலில் ஞானமணியின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த 5 பேருக்கும், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. மோதல் தொடர்பாக போலீசார் இரு  தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் திமுக தரப்பில் 7 பேர்‌ மீதும் பாஜக சார்பில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாஜகவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி பாஜக சார்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் 23 ம் தேதி மாலை நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று காவல்துறைக்கு எதிராக கண்டன‌ கோஷங்களை எழுப்பினர்‌. ஆர்பாட்டத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.