ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள அஞ்சூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி கலாமணி. இவர்களுக்கு 21 வயதான கோகுல், மற்றும் 19 வயது மனோஜ் ஆகிய இரண்டு மகன்கள். கோகுல், பொறியியல் படிப்பு முடித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த கோகுல் தனது தம்பி மனோஜ் மற்றும் நண்பர்கள் சிலரோடு கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வந்துள்ளார்கள்.
15ஆம் தேதி மதியம் காவிரி ஆற்றில் அவர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருக்க மனோஜ், காவிரியாற்றின் ஒரு பகுதியில் சென்றவர் திடீரென நீர் சுழற்சியில் சிக்கி தவித்துள்ளார். அதைக்கண்ட இவரது சகோதரர் தம்பியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அந்த நீர் சுழற்சி அண்ணன் தம்பி இருவரையும் உள்ளே இழுத்து விட்டது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கூறினார்கள். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் தேடி சகோதரர்கள் இருவரையும் சடலமாகதான் மீட்டார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தது அந்தப் பகுதி மக்களிடத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.