Skip to main content

வீடு வாடகைக்கு விடுவதில் தகராறு; பட்டியலின இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

beaten on a youth in a dispute over renting out a house

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே அமைந்துள்ளது கருப்பம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 33 வயதான இவர், தான் வசிக்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கட்டட வேலைகளைச் செய்து வருகிறார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டனுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் சமரசமாக இருந்த இவர்களுக்குள் காலப் போக்கில் சிறுசிறு உரசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதன் நீட்சியாக, இந்த வாடகை வீடு விவகாரத்தில் மணிகண்டனுக்கும் பூபதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, அங்கு வந்த கருப்பம்பாளையம் திமுக ஊராட்சி மன்றத் தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான கன்னிமுத்து என்பவர், மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், திடீரென கோபமடைந்த கன்னிமுத்து, மணிகண்டனின் வாடகை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை அவரே எடுத்துச் சென்றுள்ளார். 

 

இதனிடையே, அதைக் கேட்ட மணிகண்டனை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது கன்னிமுத்து அங்கு இல்லை. அதன்பிறகு, அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, தன்னுடைய தோட்டத்திற்கு வா... என கன்னிமுத்து கூறியுள்ளார். 

 

இந்நிலையில், மணிகண்டன் அவருடைய தோட்டத்து வீட்டிற்கும் சென்றுள்ளார். அப்போது மது போதையில் இருந்த கன்னிமுத்து, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டனை அவரது வீட்டு அறையில் அடைத்து வைத்து கைகளைக் கட்டிப் போட்டு கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டனை தாக்கிய கன்னிமுத்து மீது ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் கன்னிமுத்து மீது பி.சி.ஆர் வழக்கு பதிந்துள்ளனர். இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினரான அமுல் கந்தசாமியிடம் முறையிட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ஏராளமானோர் சேர்ந்து ஆனைமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

 

அப்போது, அங்கிருந்த போலீசாரிடம் குற்றம்சாட்டப்பட்ட கன்னிமுத்துவை ஏன் கைது செய்யவில்லை என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு, அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய குறைகளை போலீசாரிடம் தெரிவித்தனர். இதனைக் கேட்டுக்கொண்ட போலீசாரும் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  தற்போது, பொள்ளாச்சியில் பட்டியலின இளைஞர் ஒருவரைக் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.