Skip to main content

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இறங்கிவந்து மனிதர்களைக் கடித்த கரடி! – பதற்றத்தில் பிளவக்கல் கிராமம்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

The bear that came down from the Western Ghats and bit humans!
                                                                மாதிரி படம்

 

இரவு 7 மணிக்கு, விருதுநகர் மாவட்டம், பிளவக்கல் டேம், விருந்தினர் மாளிகை பக்கம் சென்ற ரசூல்தீன், ராமச்சந்திரன், தெய்வேந்திரன் ஆகிய மூவரும், திடுதிப்பென்று  கரடி ஒன்று எதிரே வந்ததைப் பார்த்து பீதியில் அலறினார்கள். அந்தக் கரடி ரசூலைத் தாக்கியதில், வலது மார்பில் சிராய்ப்பு, வலது கை மணிக்கட்டு, வலது கால் முட்டிக்கு கீழ் காயங்கள் ஏற்பட்டன. இதைக்கண்ட ராமச்சந்திரனும் தெய்வேந்திரனும் பதற்றத்துடன் கத்தினார்கள். இவர்களின் அலறலைக் கேட்டு, கரடி ஓடிவிட்டது. அதிர்ச்சியில் கீழே விழுந்த ராமச்சந்திரனுக்கு இடது கால் முட்டியில் சிராய்ப்பினால் காயம் உண்டானது. 

 

கரடி கடித்த காயங்களுக்காக, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில், ரசூல் சிகிச்சை பெற்று வருகிறார். புறநோயாளியாக சிகிச்சை பெற்றுவிட்டு, ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கூமாபட்டி காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டுப் பகுதியிலிருந்து, கரடி ஒன்று அடிவாரத்துக்கு இறங்கி வந்து, மனிதர்களைக் கடித்துவிட்டு ஓடியது, அந்த கிராமத்தினரிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுத்தையைத் தொடர்ந்து கரடி நடமாட்டம்; பக்தர்கள் அதிர்ச்சி

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

A bear follows a leopard Devotees are shocked

 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்ற ஆறு வயது சிறுமி பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. தொடர் தேடுதலுக்குப் பிறகு 12 ஆம் தேதி காலை அலிபிரி வழி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

 

மேலும் சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இறுதியில் சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டது. அதே சமயம் திருப்பதி நடைபாதை அருகே மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்திருந்த நிலையில் இரண்டாவதாக ஒரு சிறுத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிடிபட்டது.

 

இதனைத் தொடர்ந்து திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இதையொட்டி பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்குப் பாதுகாப்பிற்காகக் கைத்தடி வழங்கும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடங்கி இருந்தது. மேலும் திருப்பதி மலைப் பாதையில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பாத யாத்திரை செல்ல அனுமதி அளித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில் திருப்பதி அலிபிரி நடைபாதையில் உள்ள நரசிம்மர் கோவில் பகுதியில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதே சமயம் அலிபிரி மலைப்பகுதியில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் பாதைகளில் சிறுத்தை, கரடி, முள்ளம் பன்றி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பது வனத்துறையினர் பொருத்தி இருக்கும் கேமராக்களில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

விவசாயியை தாக்கிய கரடி; அச்சத்தில் மலை கிராம மக்கள்

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

kallakurichi kalvarayan hills village bear and farmer incident 
மாதிரி படம்

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சரியான போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதிகள் ஏராளம் உள்ளன. இந்த வனப்பகுதியில் காட்டு விலங்குகள் நிறைய உள்ளன.

 

இந்த மலையில் உள்ள மேல்பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கோவிந்தன் (வயது 40). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத நிலையில் அங்கு வந்த கரடி ஒன்று கோவிந்தனை தாக்கியுள்ளது. இதனால் அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரது கூச்சலை கேட்டு அங்கு வந்துள்ளனர். இதையடுத்து கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

 

படுகாயம் அடைந்த கோவிந்தனை கிராம மக்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கோவிந்தன் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயியை கரடி தாக்கிய இச்சம்பவம் மலை கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.