Skip to main content

குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

 

திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:   “வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது” என்று அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி,திரிபு வாதத்தை முன்வைத்த  முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை,செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் “குடியரசுத் தலைவர் விருதுகளை”த் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழ் கலாச்சாரத்தினை தன் மனம் போன போக்கில் திரித்து பாஜக மற்றும் மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பிடும் நோக்கில் எழுதி வரும் அவருக்கு ஏற்கனவே பத்மவிபூசன் விருதை வழங்கி கவுரவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பினை வழங்கி செம்மொழித் தமிழுக்கும்  பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்த்திருக்கிறது.

 

s

 

ஏற்கனவே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல், தமிழ் மொழி பற்றி ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் பா.ஜ.க. அரசின் கீழ் அந்த நிறுவனம் அடியோடு முடக்கப்பட்டு,  அந்த நிறுவனம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையும் காரணத்தையும் சிறிது சிறிதாக முறியடித்திருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டு காலத்தில் படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு- தமிழ் மொழி பற்றி எந்த ஆய்வுகளுமே மேற்கொள்ள முடியாமல் அந்நிறுவனம் தத்தளித்து நிற்கிறது. 2016-17 முதல் செம்மொழி தமிழாய்வு நிறுவன விருதுகளையும் அறிவிக்காமல் தமிழ் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவதையோ, விருதுகள் வழங்கி கவுரவிப்பதையோ, கலைஞர் பெயரில் அமைந்துள்ள சிறப்பு விருதையோ,  பா.ஜ.க. அரசு வஞ்சக எண்ணத்துடன் தடுத்து நிறுத்தியிருந்தது.

 

இந்நிலையில் நாடாளுமன்றத்  தேர்தல் வருகின்ற நேரத்தில்- அவசர அவசரமாக தமிழ்நாட்டு மக்களை இதன் மூலமாகவும் ஏமாற்றி விட வேண்டும் என்ற தீய உள்நோக்கத்துடன் இப்போது “விருது கமிட்டி” ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னைத் தமிழாம் செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக் கக்கும் நாகசாமி செம்மொழி தமிழாய்வு விருதுகளை தேர்வு செய்யும் கமிட்டியில் இடம்பெற்றிருக்கிறார். தமிழர்களை- அவர்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக எண்ணி மத்திய பா.ஜ.க. அரசு அவமானப்படுத்துகிறது.

 

ஒரு ஆய்வு அல்ல- பல்வேறு ஆய்வுகளை- கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும், வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப்  பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படி செம்மொழித் தமிழாய்வு விருதுகளை பாரபட்சமின்றி தேர்வு செய்ய முடியும்? இந்த தேர்வுக்குழுவிற்கு முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர்  கோபால்சாமி  தலைவராக இருந்தாலும், மருதாசல அடிகளார் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் - தமிழ்மொழியை சிறுமைப்படுத்தி - சமஸ்கிருதத்திற்கும், வேதங்களுக்கும் தடையின்றி தாலாட்டுப் பாடி வரும் நாகசாமிக்கு ஏன் அக்குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது?  

 

தமிழர்களின் பண்பாட்டை வெளிக் கொணர ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சிகளை இன்னும் மூடி மறைத்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. இப்போது செம்மொழித் தமிழ் மீது உள்ள வெறுப்பை மட்டுமே இந்த நியமனம் எடுத்துக் காட்டுகிறது. அதை, “தேர்தல் கூட்டணி கெட்டுப் போய் விடும்” என்றும், “ஊழல் வழக்குகளில் சிறை செல்ல நேரிடும்” என்றும் அஞ்சி நடுங்கி, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்மொழிக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

ஆகவே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் “குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில்” உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு, ஆழமான தமிழ்ப் பின்னணியும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை அக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர்  பிரகாஷ் ஜவ்டேகர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழர்களின் உணர்வுடன் “விபரீத விளையாட்டு” நடத்த வேண்டாம் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.