கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் நகர சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்டதலைவர் முத்து தலைமையில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் சிதம்பரம் நகரத்தின் காந்தி சிலை, அண்ணாமலை பல்கலைக்கழகம் செல்லும் சாலை, மேம்பாலம், ஓமக்குளம் சீர்காழி ரோடு, சபாநாயகர் தெரு, கீழ வீதி, மேலவீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு தெருக்களில் மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றி திரிகிறது. மேலும், சாலைகளில் மாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு சண்டையிடுவதால் சாலையில் செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் இருப்பது தெரியாமல் பல்வேறு வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி பல்வேறு விபத்துகளில் சிக்கி வருகிறார்கள் மேலும் சிலர் உயிர் பலியும் ஆகியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிதம்பரத்திலிருந்து ஆட்டோ ஒன்று சீர்காழி மெயின் ரோட்டில் சென்ற போது இரவு நேரத்தில் மாடுகள் சண்டையிட்டு குறுக்கே வந்ததால் மாட்டின் மீது ஆட்டோ மோதி எதிரே வந்த அரசு பஸ்சில் ஆட்டோ சிக்கியது. இதனால் சம்பவ இடத்திலே அந்த ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார்.
இது போன்ற பல்வேறு விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நகரில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரந்தர்ஷா, சிதம்பரம் காவல்துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்களிடம் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் செந்தில், வெங்கடேஷ், மோகன்தாஸ், தியகராஜன், பீட்டர் உள்ளிட்ட அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகிகள் சம்சுதீன், நாகலிங்கம், ராஜ்குமார், பாண்டியன் ஆகிய ஆட்டோ ஓட்டுனர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.