Skip to main content

“தக்காளி, காய்கறி விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” - ராமதாஸ் 

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

"Government should take action to reduce tomato and vegetable prices!" - Ramadoss

 

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தக்காளியின் விலை ரூ. 130ஐ தாண்டி விற்கப்படுகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “தமிழ்நாட்டில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் கைகளுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், நிலைமையை சமாளிக்க அவை போதுமானவையல்ல.

 

தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் பெய்த தொடர்மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அவற்றில் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வாகும். தக்காளி விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. வெங்காயம் விலை கிலோ ரூ.60 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலை சராசரியாக கிலோ ரூ.100 என்ற அளவில் உள்ளது. காய்கறிகளின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தக்காளி இல்லாத ரசம் தான் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான வீடுகளில் இன்று பொது உணவாக மாறியிருக்கிறது. இது மிகைப்படுத்தப்பட்ட செய்தியல்ல. உண்மை.

 

காய்கறிகள் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்குடன், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும்; சென்னை, கோவை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 65 பண்ணை பசுமைக் கடைகள் மூலம் பொதுவாக அனைத்துக் காய்கறிகளும், குறிப்பாக தக்காளியும் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.  

 

தமிழக அரசின் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.85 முதல் ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்; ஒருநாளைக்கு 15 டன் தக்காளி இவ்வாறு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். இது விலைக்குறைப்புக்கான அடையாளமாகவும். நல்லெண்ண நடவடிக்கையாகவும் இருக்கும். ஆனால், மக்களின் பிரச்சினையை இது தீர்க்காது. தமிழ்நாட்டின் ஒருநாள் தக்காளித் தேவை 5 ஆயிரம் டன் ஆகும். சென்னையின் ஒருநாள் தக்காளித் தேவை மட்டும் சுமார் 1000 டன் ஆகும். ஆனால், தமிழகத்தின் மொத்தத் தேவையில் ஐநூற்றில் ஒரு பங்கை மட்டும்தான் கூட்டுறவு கடைகள் மூலம் அரசு விற்கவுள்ளது. அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

 

நியாயவிலைக் கடைகளைப் போலவே பண்ணை பசுமைக் கடைகளும் விலைக் கட்டுப்பாட்டுக்கான அற்புதமான தத்துவம் ஆகும். வெளிச்சந்தையில் பதுக்கல் காரணமாக விலைகள் உயரும்போது, பண்ணை பசுமைக் கடைகளில் மலிவு விலையில் காய்கறிகள் விற்கப்பட்டால், அதனால் வெளிச் சந்தையில் ஏற்படும் தாக்கத்தால், பதுக்கப்பட்ட பொருட்கள் வெளியில் கொண்டுவரப்படும்; அதனால் விலைகள் குறையும் என்பதுதான் அரசு நிறுவனங்கள் மலிவு விலையில் பொருட்களை விற்பதற்கான காரணம். சந்தையில் சமநிலையை ஏற்படுத்துவதுதான் இந்தத் தத்துவத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

 

ஆனால், இப்போது பதுக்கல் காரணமாக விலை அதிகரிக்கவில்லை. மாறாக, பெருமழையால் தக்காளி மற்றும் காய்கறிச் செடிகள் அழிந்ததால், தேவைக்கும் வரத்துக்கும் இடைவெளி அதிகரித்ததுதான் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இத்தகைய சூழலில் மிகக்குறைந்த அளவில் காய்கறிகளையும்,  தக்காளியையும் விற்பனை செய்வதால் விலையைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, மராட்டியம் வரை இதே நிலைதான் என்பதால் சந்தைச் சமநிலை  மூலம் காய்கறிகள் மற்றும் தக்காளியின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

 

மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம் மக்களின் சுமையை குறைப்பதுதான் இன்றைய தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும். கரோனா காலத்தில் நடமாடும் காய்கறி கடைகள் உருவாக்கப்பட்டதைப் போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம். இவற்றை அரசு நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்தால் அவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும். இதற்காக விலைக்கட்டுப்பாட்டு நிதியம் ஒன்றை தமிழக அரசு நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.