
இந்து சமய அறநிலையத்துறையின் உயர்நிலை ஆலோசனைக்குழுவின் (Advisory Committee) அலுவல் சார உறுப்பினர்கள் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன் பிறப்பித்துள்ள அரசாணையில், “1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் கீழ், 4 பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களையும், 13 அலுவல் சாரா உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவினை (Advisory Committee) நியமனம் செய்து அரசு ஆணையிட்டது. அதன்படி நியமிக்கப்பட்ட அலுவல் சாரா உறுப்பினர்களில் ஒருவர் இயற்கை எய்திவிட்டதால் ஹரி தியாகராஜன் காலியாக உள்ள இடத்தில் அரசாணையின் வாயிலாக நியமனம் செய்யப்பட்டார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரது கடிதத்தில், இந்த ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்றாண்டுகள் என்பதால் 05.01.2025 அன்று முடிவடைந்துவிட்டது. எனவே, திருக்கோயில்களின் நலன் கருதி மேற்படி ஆலோசனைக் குழுவினை மீண்டும் ஏற்படுத்தி அதன் உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டியுள்ளது என்பது அவசியமாகிறது. இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின் கீழ் ஆலோனைக் குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யும் பொருட்டு, 15 ஆன்மிக மற்றும் சான்றோர் பெருமக்களை அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. இந்த பரிசீலனைக்குப் பின்னர், அதனை ஏற்று, ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததால், தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக்கொடைகள் சட்டத்தின் கீழ் ஆலோசனைக் குழுவினை (Advisory Committee) நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது. அதன்படி பதவி பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைவராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துணைத் தலைவராகவும், அறநிலையங்கள் துறை செயலாளர் உறுப்பினராகவும், இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் உறுப்பினர் மற்றும் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதினம் சீர்வளர் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், பொம்மபுரம் ஆதினம் மயிலம் சிவஞான பாலய சுவமிகள், சு.கி.சிவம் மு.பெ.சத்தியவேல் முருகனார், த. இராமசுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜீன் சந்தான கிருஷ்னான், ஸ்ரீமதி சிவாங்கர், தேச மங்கையர்கரசி, எஸ். தங்கவேலு மற்றும் கே.சந்திர மோகன் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் இந்த ஆலோசனை குழுவானது அலுவல் சாரா உறுப்பினர்களுக்குப் பயணப்படி மற்றும் தினப்படி வழங்கும் பொருட்டு, முதல் நிலைக் (First Class Committee) குழுவாகக் கருதப்படும். இந்த ஆலோசனைக் குழுவின் அலுவல் சாரா உறுப்பினர்களுக்குப் பயணப்படி மற்றும் தினப்படி ஆகியவற்றை வழங்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதியளிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.