Skip to main content

ஜாமீன் கோரி அங்கித் திவாரி மனு; இன்று விசாரணை

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Ankit Tiwari Bail Petition; Hearing today


திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது கடந்த 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.

அதன்பின்  திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு திவாரி உணவு அருந்தாமல் மனநிலை பாதிக்கப்பட்டது போல் அழுதுகொண்டே இருந்ததால் அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். அங்கு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த திவாரிக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் அளித்தனர். ஆனால் திவாரி தான் வருமானவரி செலுத்தக்கூடிய நபர் என்பதால் தனக்கு முதல் வகுப்பு அறை வேண்டும் என அவர் வைத்த கோரிக்கையை சிறைத்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

அங்கித் திவாரி தான் பெற்ற லஞ்சப் பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாகத்  தெரிவித்திருந்தார். எனவே லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி மனு அளித்திருந்தனர்.

அந்த மனு நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கித் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரது சார்பில் வக்கீல் செல்வம் என்பவர் ஆஜரானார். லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த  வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் சேகரிக்க உள்ளதால் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதற்கு அங்கித் திவாரியின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்ட 2 நாள் காவலை வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து போலீசார் அவரைத் தங்கள் பாதுகாப்பில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் 14ம் தேதி (இன்று) கோர்ட்டில்  ஆஜர்படுத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது.

சார்ந்த செய்திகள்