Skip to main content

‘நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது..’ - உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

actress chitra incident  chennai high court police


நடிகை சித்ரா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக, காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9- ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், சித்ராவின் கணவர் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்த வழக்கில், கடந்த டிசம்பர் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

அவரது மனுவில், ‘தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவோ, அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவோ, என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. எனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. எந்த குற்றமும் செய்யாத எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாகவும், அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் (04/02/2021) தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்