
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. காட்டுப் பன்றிகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (32) இவர் தனது விவசாய நிலத்தில் முட்டைகோஸ் பயிரிட்டு இருந்தார். வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறிய காட்டு பன்றிகள் அவரது தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது . தொடர்ந்து 2 நாட்களாக முட்டைகோஸ் பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. இதனால் சுமார் ஒரு ஏக்கர் முட்டைகோஸ் பயிர் நாசம் ஆனது. இதனால் விவசாயி வேதனை அடைந்துள்ளார். சேதாரமான பயிர்களுக்கு வனத்துறை உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.