
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பட்லூர் என்ற பகுதியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற வாசீஸ்வரர் சௌந்தரநாயகி கோவில் உள்ளது. 800 ஆண்டு பழமையான இந்த கோவிலில் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து கருவறையில் உள்ள ஐம்பொன்னாலான வாகீஸ்வரர் சிலை மற்றும் சில சிலைகளை உடைத்துள்ளனர்.
மேலும் உடைந்த ஐம்பொன் சிலையை எடுத்து வந்து கோவிலுக்கு பின்புறம் உள்ள முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கோவிலில் வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை செய்தனர். இதற்கு முன்பே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலில் ஆபரணங்கள், அபிஷேக பொருட்கள், பாத்திரங்கள், திருடுபோனது. இந்த கோவிலில் தொடர்ந்து கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிலைகளில் பதிந்துள்ள கைரேகை மாதிரிகள் எடுக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.