Skip to main content

6ம் வகுப்பு மாணவனுக்கு ஆசிட் ஜூஸ்... திணறும் காவல்துறை... பின்னணி என்ன? 

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

Acid juice was given 6th student issue kanniyakumari

 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ளது மெதுகும்மல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சுனில் - சோபியா தம்பதியின் மகன் அஸ்வின். கணவர் சுனில் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் தாய் சோபியா தான் மகனைக் கவனித்து வருகிறார்.  11 வயதான அஸ்வின் அதங்கோடு பகுதியில் உள்ள மாயா கிருஷ்ணா ஸ்வாமி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த ஆண்டுக்கான காலாண்டுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதியோடு முடிந்த நிலையில் 10 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது. கடைசித் தேர்வு அன்று காலையில் எழுதி விட்டு மாணவர்கள் வெளியே வந்துள்ளனர். இதனையடுத்து நமக்கு 10 நாட்கள் லீவு என்ற மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சட்டையில் மை தெளித்தும்  சாயப் பொடி வீசியும் பள்ளி வளாகத்தில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

அந்த சமயத்தில் அதே பள்ளிச்சீருடை அணிந்த மாணவர் ஒருவர் அஸ்வினிடம் ஒரு ஜூஸ் பாட்டிலை கொடுத்துக் குடிக்கச் சொல்லியிருக்கிறார். எனக்கு வேண்டாம் என்று அஸ்வின் சொல்லியும் வலுக்கட்டாயமாக அந்த ஜூஸைக் குடிக்க வைத்துள்ளார். அந்த ஜூஸைக் குடித்த அஸ்வின் அதன் பிறகு வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இதனையடுத்து அஸ்வினுக்கு மறுநாள் காலை திடீரெனக் காய்ச்சல் வந்துள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே காய்ச்சல் பரவி வருவதால் அஸ்வினை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாய் சோபியா அங்கே ஊசிபோட்டு மருந்து வாங்கியுள்ளார். ஆனால் 2, 3 நாட்களில் காய்ச்சல் மேலும் அதிகரித்துள்ளது.

 

இதையடுத்து ‘ஸ்கூல்ல வச்சி ஒருத்தன் ஜீஸ் தந்தான். அதுல ரெண்டு மடக்கு தான் குடிச்சேன் மீதியை குடிக்க முடியல. ஓரு மாதிாியாக இருந்தது’ என்று தாய் சோபியாவிடம் மகன் அஸ்வின் தெரிவித்து இருக்கிறார். அப்போது இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சோபியா பிறகு அஸ்வினை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளார்.

 

இதனையடுத்து மிகுந்த உடல்நலக்குறைவு ஏற்பட்ட அஸ்வினுக்கு  29ம் தேதியன்று அவனது வாய் மற்றும் நாக்கு வெந்து இருந்தது. இதைப் பார்த்து பயந்து போன சோபியா வெளிநாட்டில் இருந்த தன் கணவனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரின் ஆலோசனைப்படி திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு அஸ்வினை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே 2 நாள் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பிறகும் வயிற்று வலியால் துடித்த அஸ்வினை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்க்கையில் அவரது  குடல், தொண்டை, நுரையீரல் என அனைத்து உறுப்புகளும் வெந்து சுருங்கியிருந்தது. அத்தோடு இரண்டு கிட்னிகளும் செயலிழந்திருப்பது தெரியவந்தது. அதன்பிறகு அஸ்வின் குடித்த ஜூஸில் ஆசிட் கலந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  இதனைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பிய அஸ்வினின் தந்தை சுனில் இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

இந்நிலையில் அஸ்வினுக்கு உடல்நிலை நாளுக்கு நாள் சாியில்லாமல் போக 23 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஸ்வின், கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். அஸ்வினின் மரணம் அவரது பெற்றோருக்கும் சக பள்ளி மாணவா்களுக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைவழக்கு பதிவு செய்து  களியக்காவிளை போலீசாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதுகுறித்து அஸ்வினின் பெற்றோரிடம் கேட்டபோது ‘போலீஸ்ல புகார் கொடுத்து 15 நாட்கள் ஆயிடுச்சி. என் மகனுக்கு ஆசிட் கொடுத்தவன் யாருனு இன்னும் கண்டுபிடிக்கல. ஆசிட் கொடுத்தவன் யாா்னு என் மகனுக்கு மட்டும் தான் தொியும். இப்ப எங்க மகனும் எங்கள விட்டு போயிட்டான்’ எனக் கதறி அழுதுள்ளனர்.

 

அஸ்வினின் சித்தப்பா ஜஸ்டின் ஜாஸ் கூறும்போது “காவல்துறை பள்ளி நிா்வாகத்திற்கு தான் சப்போா்ட்டாக செயல்படுகிறது. பள்ளியில் மே மாதத்தில் இருந்து சிசிடிவி காமிரா பழுதடைந்துள்ளது என்று கூறுவதை நம்ப முடியவில்லை. குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்களும் விடப் போவதில்லை” என ஆவேசமாகப் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் தொடா்பாக குற்றவாளியைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

இதுகுறித்து களியக்காவிளை போலீசாாிடம் நாம் கேட்ட போது “புகாா் தந்த அன்றே பள்ளியில் சென்று விசாரணை நடத்தினோம். மேலும் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமரா பழுதாகி இருப்பதால் சம்பவம் நடந்தது அதில் பதிவாகவில்லை. இதையடுத்து மாணவர் தரப்பிலும் பள்ளி தரப்பிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளி யார் என்று விரைவில் தெரியவரும் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கவில்லை. பள்ளிக்குச் சென்று மற்ற மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்