புகையிலை, பாக்கு, பாரபின் மெழுகு, கால்சியம் ஆக்சைடு – சுண்ணாம்பு, இனிப்புச் சுவையூட்டி சேர்க்கப்பட்ட குட்கா, மனித உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதால் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், குட்கா கடத்துவதும், பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வதும் ‘மாமூலாக’ நடக்கின்றன. ராஜபாளையத்திலும் குட்கா கடத்தியவர்கள் பிடிபட்டுள்ளனர்.
காவல்துறை எடுத்துள்ள ‘ஆக்ஷன்’ இதோ; போதை மாத்திரைகளை வாட்ஸ்-ஆப் குழு மூலம் விற்ற ராஜலட்சுமி உள்ளிட்ட 6 பேர் சென்னையில் பிடிபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான முத்துப்பாண்டி ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், தகவல் கிடைத்து, ராஜபாளையம் – மதுரை சாலையில் ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, சேலத்திலிருந்து சங்கரன்கோவிலுக்கு நூதனமுறையில் லாரியில் மறைத்துவைத்து கடத்திவரப்பட்ட தடைசெய்யப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான, 1 டன் எடையுள்ள குட்கா புகையிலைப் பொருட்கள் மூடை மூடையாகச் சிக்கியுள்ளன. கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர்களான சேலம் மேட்டேரியைச் சேர்ந்த கண்ணன், தர்மபுரியைச் சேர்ந்த ராஜா ஆகிய இருவர் விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தையும் தடையையும் கண்டுகொள்ளாமல், குட்கா கடத்தல் பேர்வழிகள் ‘கண்ணாமூச்சி’ காட்டியபடியே உள்ளனர்.