Skip to main content

சாமியார் பேச்சைக்கேட்டு நடுவீட்டில் 25 அடிக்கு குழிதோண்டிய பெண்.... கனிமவளத்துறை வசம் சிக்கிய சாமியார்!

Published on 18/08/2019 | Edited on 19/08/2019

சென்னையில் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு செய்வினை தகடை எடுப்பதாக நடு வீட்டில் 25 அடிக்கு ஆழமாக குழி தோண்டியதால் போலிஸ் மட்டுமில்லமால் கனிம வளத்துறையின் பிடியில் சிக்கி இருக்கிறார் பெண் ஒருவர்.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...

 

சென்னை டிபி சத்திரத்தில், கேவிஎன்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி மைதிலி. இவர்கள் இருவரும் அங்குள்ள குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். மைதிலி ஜாதகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டம் காரணமாக ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை எடுத்தால்தான் குடும்பம் வளம்பெறும் என்றும், இல்லையெனில் உங்கள் இருவர் உயிருக்கும் ஆபத்து என்றும் கூறப்பட்டது.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...

 

இதனையடுத்து ஒருநாள் ராஜாவின் கை, கால்கள் திடீரென செயலிழந்தந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்த்து கணவருக்கு சிகிச்சை அளிக்காமல் கணவர் ராஜாவை மின்ட் தங்கசாலையில் உள்ள மந்திரவாதியான சுரேஷ் என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் மைதிலி. அவர்களிடம் இருந்த பணத்தை நைசாக பேசி உருவிக்கொண்ட அந்த மந்திரவாதி வீட்டிற்குள் செய்வினை தகடு ஒன்று புதைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அதனைத் தோண்டி எடுத்து விட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும், கணவர் ராஜாவிற்கும் உடல்நிலை சரியாகி விடும் என்றும் கதை அளந்து விட்டுள்ளார்.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...

 

இதனை உண்மை என்று நம்பிய மைதிலி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மந்திரவாதியின் துணையுடன் நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் தகட்டை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். வீட்டுக்கு நடுவில் குழி தோண்டி தகட்டை தேடியுள்ளார். கயிற்றைக் கட்டி கிணறு போல் 25 அடி ஆழத்திற்கு தோண்ட, மூட்டை மூட்டையாக மண் வந்ததே தவிர தகடு ஏதும் கண்ணில் அகப்படவில்லை.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...

 

இப்படி வீட்டின் நடுவில் தோண்டப்பட்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை மூட்டையாக கட்டி வீட்டிற்கு வெளியே வைத்துள்ளார் மைதிலி. இரவில் மைதிலியின் வீட்டில் ஏதோ நடக்கிறது, வீட்டுக்கு வெளியில் ஏன் இவ்வளவு மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என சந்தேகித்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். மைதிலியின் வீட்டிற்கு வெளியே 70 மூட்டை மண் இருப்பதை கண்டு அதிர்ந்துபோன காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

 

25 feet deep Pit in the middle of the house in Chennai...


அப்போது அந்த விசாரணையில் செய்வினைக்கு வைக்கப்பட்ட தகட்டை எடுப்பதற்காக நடுவீட்டில் இருபத்தைந்து அடிக்கு குழி தோண்டியது வெளி வந்தது. இது தொடர்பாக மைதிலி, அவருடைய கணவர் ராஜா, அந்த மந்திரவாதி சுரேஷ் ஆகியோரை விசாரித்த காவல்துறையினர் கனிமவள துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது மூவரும் கனிம வளத்துறை அதிகாரிகளின் வசம் உள்ளனர்.

செய்வினை கோளாறு என்று நம்பி நடு வீட்டில் 25 அடி ஆழத்திற்கு குழியை தோண்டியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.