Skip to main content

அந்தியூர் அருகே குடோனில் பதுக்கிய 1500 கிலோ குட்கா; 4 பேர் கைது

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

1500 kg Gutka hoarded in a godown near Andhiyur; 4 people arrested

 

அந்தியூர் அருகே 1500 கிலோ குட்கா குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தியூர் - பவானி ரோடு, செம்புளிச்சாம்பாளையம் பகுதி, கற்பகம் நகர், 3வது குறுக்கு வீதியில் உள்ள ஒரு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாகப் பதுக்கி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

தகவலின் பேரில் போலீசார் குடோனுக்குள் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த சிலர் குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாகக் கட்டி அங்குள்ள லோடு வேனில் ஏற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அஜித் (23), சேலம் மாவட்டம் ஓமலூர் திமிரி கோட்டை ராமன்பட்டியைச் சேர்ந்த மணி (30), சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (42), கார்த்தி (20) எனத் தெரிய வந்தது.

 

போலீசார் குடோனில் மேற்கொண்ட சோதனையில் 85 மூட்டையில் 1500 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும். இந்த குடோனின் உரிமையாளர் பவானியைச் சேர்ந்த ரவி எனத் தெரிய வந்தது. ரவி தலைமறைவு ஆகிவிட்டார். வெளியிடங்களிலிருந்து குட்கா கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜித், மணி, செல்வம், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் குடோன் உரிமையாளர் ரவியை தேடி வருகின்றனர். ரவி சிக்கினால் தான் குட்கா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது எங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என முழு விவரம் தெரிய வரும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேன் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 1500 கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.