
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காரங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப், டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது. இது, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி. அனைத்து ஒன்றிய விசாரணை அமைப்புகளும் அரசாங்கத்தின் கைகளில் சிப்பாய்களாக மாறிவிட்டன. இந்த ஏஜென்சிகள் அனைத்தும் கண்ணை மூடிக்கொண்டு வரிசையில் நிற்கின்றன. மோடி அரசின் உத்தரவை பெற்றே, அமலாக்கத் துறை இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது.
அதானி குழுமத்திற்கு காற்றாலை மின்சாரத் திட்டம் தர மோடி அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் இதில் தலையிட வேண்டிய கட்டாயம் என்ன? இது பற்றி அமலாக்கத் துறையும், பிற ஏஜென்சிகளும் ஏன் விசாரிக்காமல் தூங்குகின்றன?. இது, விசாரணைக்குரிய ஊழல் வழக்கு அல்லவா? எந்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்களை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதா? அமலாக்கத்துறை எப்போதாவது அதானி குழுமத்தைச் சேர்ந்த யாரையாவது அழைத்திருக்கிறதா? அல்லது விசாரிக்க அழைக்க திட்டமிட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இலங்கை மின்வாரிய தலைவர் பெர்டினாண்டோ, இலங்கை மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்திக்கான டெண்டரை இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்திற்கு கொடுத்துள்ளது. இந்த காற்றாலை மின்சாரத் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்க அதிபர் கோத்தபய ராஜபக்சே மூலம் பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதன் பிறகு மறுநாளே இதை மறுத்த அவர், பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையாக இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப்பின் கேள்வி மேலும் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.