
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்ற தேர்தலுக்கு த.வெ.க.வும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் (26 மற்றும் 27.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் 7 ஆகிய மாவட்டங்களைச் சேர்த்த அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றியிருந்தார். இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களில் முதற்கட்டமாக 80 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களைக் கடந்த 30ஆம் தேதி (30.05.2025) விஜய் சந்தித்துப் பாராட்டி வாத்துகளைத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து 2ஆம் கட்டமாக கடந்த 4ஆம் தேதி (04.06.2025) கல்வி விருதும் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 75 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்குக் கல்வி விருதினை வழங்கினார். இந்நிலையில் வரும் 13ஆம் தேதி (13.06.2025) 3ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் நேரடியாக மாணவ மாணவிகளுக்கு விருதினை வழங்க உள்ளார். மற்றொரு புறம் அக்கட்சியின் சார்பில் தொழிற்சங்கம் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொழிற்சங்கத்திற்கான பதிவுகளையும் முறையாகப் பதிவு செய்த பிறகு அதில் நிர்வாகிகளை நியமித்து தொழிற்சங்கம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு 13ஆம் தேதி மாணவ மாணவிகளுக்கான விருது வழங்கும் விழாவின் இறுதிக் கட்ட நிகழ்ச்சியை முடித்துவிட்டு அடுத்த கட்டமாகத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரமாகச் செயல்படுத்த அக்கட்சியின் தலைவர் பொதுச்செயலாளர் என். ஆனந்த்திற்கு விஜய் அறிவுரை கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.